நானோவுக்கு கட்டிய பணம் வீணாகாது!

ஒரு வேளை இதே பணத்தை நீங்கள் வங்கியில் செலுத்தினால் கிடைக்கிற வட்டியைவிட, டாடா மோட்டார்ஸ் தரும் வட்டி அதிகமாகவே இருப்பதால், பணம் செலுத்தியவர்களுக்கு நல்ல லாபமே மிஞ்சுவதாக வங்கித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
சமீபத்தில் ரெபோ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெபோ ரேட்டை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து உடனடியாக பொது மக்களின் வைப்புத் தொகைக்கான வட்டியைக் குறைத்துவிட்டன வங்கிகள் (இந்த வேகம், கடன்களுக்கான வட்டியைக் குறைப்பதில் காணோம்!).
இதன்படி இப்போது நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியாக 7 முதல் 8 சதவிகிதத்துக்குள்தான் வழங்கப்படுகிறது. அடுத்த வாரம் சில வங்கிகள் இதை 6 சதவிகிதமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன.
ஆனால் டாடா மோட்டார்ஸில் நானோ காருக்கு முன்பணம் (கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். முதல் ஒதுக்கீட்டில் நானோ கிடைக்காதவர்கள், அடுத்த குலுக்கல் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இப்படி காத்திருக்கும் காலத்துக்கு, உங்கள் டெபாஸிட்டுக்கு கணிசமான வட்டி செலுத்துகிறது டாடா மோட்டார்ஸ். ஆண்டுக்கு 8.75 சதவிகிதமாக இந்த வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது வணிக வங்கிகள் தரும் வட்டியைவிட இரண்டு சதவிகிதத்துக்கும் அதிகம்.
எனவே நானோ கிடைக்காமல் காத்திருந்தாலும், நீங்கள் செலுத்திய தொகைக்கான பலன் கிடைத்துக் கொண்டே இருக்கும். அவசரப்பட்டு நானோ ஒதுக்கப்படாத கோபத்தில், கட்டிய பணத்தை திரும்பப் பெற்றுவிட வேண்டாம், என்று வங்கி அதிகாரிகளே வாடிக்கையாளர்களுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்களாம்!


Click it and Unblock the Notifications








