இன்று திவால் நோட்டீஸ் தருகிறது ஜிஎம்!

நூறாண்டுகளுக்கும் மேல் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் பின்னிப் பிணைந்த நிறுவனம் ஜிஎம். ஒவ்வொரு அமெரிக்கரின் வாழ்க்கையிலும் கலந்துவிட்ட பெயர் அது.
ஆனால் இன்று கழுத்தை நெறிக்கும் கடன்கள் மற்றும் நஷ்டத்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்த நிறுவனம் வேறு வழியின்றி நீதிமன்றப் பாதுகாப்பை நாடுகிறது. திவால் நோட்டீஸ் கொடுப்பதன் மூலம் 60 சதவிகித நிறுவனப் பங்குகளை தங்களுக்கு நிதியளித்த அமெரிக்காவுக்கே தருகிறது.
மேலும் கடன்காரர்களுக்கு நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே அனைத்துத் தரப்பினரின் சம்மதத்தோடு இந்த திவால் அறிவிப்பை வெளியிட உள்ளது ஜிஎம்.
அமெரிக்க பொருளாதார சரித்திரத்தில் ஜிஎம் நிறுவனத்தின் வீழ்ச்சிதான் மிகப்பெரிய சரிவாகப் பார்க்கப்படுகிறது.
இன்றைய நிலையில் நிறுவனத்தை நடத்த கையில் பணமில்லாமல் முடங்கிப் போயுள்ளது ஜிஎம். இந்த நெருக்கடிக்கு கைகொடுக்கும் விதத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முன்பு 20 பில்லியன் டாலர் நெருக்கடி கால நிதியை வழங்கினார். ஆனால் அதுமட்டும் போதுமானதாக இருக்கவில்லை.
எனவே மேலும் 30 பில்லியன் டாலர் புதிய நிதி உதவியை ஜிஎம்முக்கு வழங்குகிறார். இந்த தொகையைக் கொண்டு ஜிஎம் நிறுவனம் தனது நிறுவனத்தை மறு நிர்மாணம் செய்து கொள்ள வேண்டும்.
அதாவது, திவால் என்றால் நிறுவனத்தை இழுத்து மூடிவிடுவதாக மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. நிறுவனத்தை முழுமையாக மறுநிர்மாணம் செய்வதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இதுவரை இருந்த நிர்வாகம் முழுமையாக நீக்கப்பட்டு, அரசின் மேற்பார்வையில் புதிய மூலதனத்துடன் இந்த நிறுவனம் உற்பத்தியைத் துவங்குகிறது.
அரசு மற்றும் நீதிமன்றத்தின் பாதுகாப்புடன், தற்போதுள்ள பணியாளர் அளவில் மேலும் 34 சதவிகிதத்தைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 21000 பணியாளர்கள் குறைக்கப்படுகிறார்கள். அதன் தற்போதைய டீலர்களில் 2600 பேர் நீக்கப்படுகிறார்கள். தற்போதைய மாடல் கார்களில் செவர்லே, காடில்லாக், ப்யூக் மற்றும் ஜிஎம்சி ஜெட்டிஸன் ஆகிய குறிப்பிட்ட மாடல்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற மாடல் கார்களின் உற்பத்தியை அடியோடு மூடுகிறார்கள்.
"இது மிக மிக கஷ்டமான, வலி மிக்க நடவடிக்கைதான். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. இதுவரை இருந்த ஜிஎம் நிறுவனம் இனி இல்லை. இது புதிதாய் பிறக்கவுள்ள ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பு..." என்கிறார் அமெரிக்க செனட்டர் கார்ல் லெவின்.
தனியார் துறை முதலீட்டில் அமெரிக்க அரசு இப்போது புதிய வரலாறே படைத்து வருகிறது எனலாம், காரணம் இதற்கு முன் தனியார் துறை வணிக நடவடிக்கைகள் எதிலும் அரசு தலையிட்டதே இல்லை.
ஆனால் இப்போது, திவாலான வங்கிகளைக் காக்க அரசு நிதியளிதத்தது. திவாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அரசே நிதி உதவி செய்தது. அடுத்து க்றிஸ்லர் கார் உற்பத்தி நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுத்த போதும் அதனை அமெரிக்க அரசே நிதியுதவி அளித்து ஏற்றது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சிறிது நேரத்தில் ஜிஎம் நிறுவனம் திவாலாகி விட்டதை முறைப்படி அறிவிக்கும் அமெரிக்க அதிபர், அதற்கான தனது மறுசீரமைப்பு திட்டம் குறித்தும் விவரிக்கிறார்.
அதிபர் ஒபாமாவின் அறிவிப்புக்குப் பிறகு, முறைப்படி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் ஜிஎம் நிறுவனத் தலைவர், திவாலானதன் காரணம் மற்றும் மறு நிர்மானம் குறித்தும் விவரிக்கிறார்.
புதிய திட்டத்தின் படி இனி ஜிஎம் நிறுவன நிர்வாகத்தின் அன்றாட அலுவல்களைக் கூட ஒபாமாவின் அதிகாரிகளே கவனிப்பார்கள். நிறுவனத்துக்கென்று சிஇஓ மற்றும் இயக்குநர்கள் குழு என சகலமும் வெள்ளை மாளிகையின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும்.
'நமது நோக்கம் குறுகிய காலத்தில் ஜிஎம் நிறுவனத்தை லாபத்தில் இயங்க வைப்பதே', என்கிறது இன்று வெளியாகியுள்ள வெள்ளை மாளிகை அறிக்கை.
14 யூனிட்டுகள் மூடல்!
இந்த திவால் அறிவிப்பைத் தொடர்ந்து ஜிஎம்மின் பல்வேறு நாட்டு கிளைகள் மூடப்படுகின்றன, அல்லது அந்தந்த நாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
ஜெர்மன் அரசு தங்கள் நாட்டில் உள்ள ஜிம்மின் ஓபல் நிறுவனத்துக்கு 2 பில்லியன் டாலர் வரை கடன் தர முன்வந்துள்ளது.
அதேநேரம் அமெரிக்காவின் இந்தத் திட்டம் சரியான பலன் தருமா என பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். "ஜிஎம் நிறுவனம் முழுமையாக தனது திவால் அறிவிப்பை வெளியிட்டு, அதை தனக்கு கடன் கொடுத்தவர்களிடம் ஓட்டுக்கு விட்டிருக்க வேண்டும். இப்போதுள்ள நிலைமையை திவால் என எடுத்துக் கொள்ள முடியாது. ஜிஎம் நிறுவனம் தனது சொத்துக்களை அரசுக்கு கைமாற்றிவிட்டுள்ளது. இது நிறுவனத்தின் உரிமை மாற்றம் மட்டுமே. இதற்கு திவால் என்ற பெயரைப் பயன்படுத்தி அதற்கான சலுகைகளை அனுபவிக்கப் பார்க்கிறாகள்", என்கிறது சிஎன்என்.


Click it and Unblock the Notifications








