ஏ-ஸ்டார் கார்களை வாபஸ் பெரும் மாருதி!

'எரிசக்தி பம்ப்' குறைபாடு காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது ஏ-ஸ்டார் மாடல் கார்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவற்றை இந்திய சந்தையில் இருந்து திரும்பப்பெற உள்ளது.
இதுதொடர்பாக மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏ-ஸ்டார் மாடல் கார்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து சில புகார்கள் வந்தன. எரிபொருள் டாங்க் தொடர்பாக ஒரே மாதிரியான புகார்கள் வந்தன.
இதையடுத்து மற்ற வாடிக்கையாளர்களையும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். ஆகஸ்ட் 22ம் ஆண்டுக்குள் விற்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களில் மட்டும் இந்த குறைபாடு இருந்தது தெரியவந்தது.
டாங்க்கில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எண்ணெய் நிரப்பப்படும் சமயத்தில், கசிவு ஏற்படக்கூடிய அளவுக்கு குறைபாடுகள் காணப்பட்டன.
இதனால் பெரிய பிரச்னை இல்லை என வாடிக்கையாளர்கள் கருதினாலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த காலகட்டத்தில் விற்கப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
சுமார் ஒரு லட்சம் கார்களில் எரிசக்தி பம்ப் கேஸ்கெட் மற்றும் ரிங் ஆகியவற்றை மாற்றித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே டோயோட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில மாடல்களில் ஆக்ஸிலேட்டர் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், அந்த மாடல் கார்களை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
அதுபோல ஹோண்டா நிறுவனமும், 2007ல் வெளியான தனது 'சிட்டி' மாடல் கார்களில், பவர் விண்டோ ஸ்விட்ச்சில், கோளாறு ஏற்பட்டதால் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை பரிசோதித்து உதிரிபாகங்களை மாற்றித்தருவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








