மறுபடியும் இந்தியாவிற்கு வருகிறது பியூஜியட் கார்

உலக கார் உற்பத்தியாளர்களின் பார்வை எல்லாம் தற்போது இந்திய மார்க்கெட்டின் மேல் தீவிரமாக திரும்பியுள்ளது. அந்த வரிசையில் பிரஞ்ச் கார் உற்பத்தியாளர்களான பியூஜியட் நம் நாட்டிற்கு மீண்டும் திரும்ப ஆவலாக உள்ளனர்.
தனது பியூஜியட் சிட்ரோன் கார்களை இந்தியாவில் தயாரிக்க அது திட்டமிட்டுள்ளது. அனேகமாக இந்த தயாரிப்பு நிறுவனப் பிரிவு தமிழகத்தில் அமையலாம் என்று தெரிகிறது.
இந்திய கார் மார்க்கெட் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. இன்னும் 10 வருடத்தில் 60 லட்சம் கார்கள் விற்பனையாக்க் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணிப்புதான் உலக கார் ஜாம்பவான்களை 'யூ டர்ன்' போட்டு இந்தியா பக்கம் 'வண்டி'யை திருப்ப தூண்டியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், பியூஜியட் தயாரிப்புப் பிரிவை தமிழகத்தில் தொடங்குவது குறித்து பேச்சு நடந்து வருகிறது. அனேகமாக சென்னை அருகே இந்த தயாரிப்புப் பிரிவு அமையும் வாய்ப்புள்ளது.
அந்த நிறுவனம் எவ்வளவு முதலீட்டில் இதை ஆரம்பிக்கும் என்று சொல்ல முடியாது. அதேசமயம், முதலில் பாகங்களை ஒன்று சேர்க்கும் நிறுவனமாக தொடங்கப்பட்டு பின்னர் அது முழுமையான கார் தயாரிப்புப் பிரிவாக மாறும் என்றார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் விருப்ப பகுதியாக திகழ்ந்து வருகிறது. ஏற்னவே ஹூண்டாய், போர்ட்டு, ஹிந்துஸ்தான்- மிட்சுபிசி மோட்டார்ஸ் மற்றும் பி.எம்.டபுள்யூ நிறுவனங்கள் சென்னையில் தங்களது பிரிவை கொண்டுள்ளன.
அன்மையில் ரெனால்ட்-நிஸானும் தன் கம்பெனியை சென்னையில் ஆரம்பித்தது. ஒவ்வொரு வருடமும் 12.8 லட்சம் கார்களும் 3.5 லட்சம் வர்த்தக வாகனங்களும் தயாரிக்கும் ஆற்றல் சென்னைக்கு உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இந்த கணக்கின் படி நிமிடத்திற்கு 3 கார்களும் 75 நொடிக்கு 1 வர்த்தக வாகனமும் தயாரிக்கப்படும். பியூஜியட் நிறுவனம் சென்னையில் தனது உற்பத்திப் பிரிவை தொடங்கினார், ரெனால்ட்-நிஸானை அடுத்து தமிழகத்திற்கு வரும் இரண்டாவது பிரஞ்ச் நிறுவனம் என்ற பெயரைப் பெறும்.


Click it and Unblock the Notifications








