இந்தியாவில் பிரபலமாகும் அசெம்பிளிங் சொகுசு கார்கள்!

இதில் இரண்டு வசதிகள் உள்ளன. நாம் விரும்பிய அதே சொகுசு காரை வாங்க முடியும். அதேசமயம், விலையும் குறைவாக இருக்கும். காரணம் காருக்கான சுங்க வரி குறையும்.
புதிய சொகுசுக் காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் அதற்கான சுங்கவரி 110 சதவீதமாகும். அதே காரை உதிரி பாகங்களாக கொண்டு வந்து அசெம்பிளிங் செய்தால் அதற்கான வரி வெறும் 65 சதவீதம் மட்டுமே.
இதன் மூலம் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்பதால் ஹூண்டாய், பிஎம்டபிள்யூ, ஜாகுவார், லேன்ட்ரோவர் போன்ற பல்வேறு கார் நிறுவனங்கள் இந்தஉத்தியைப் பின்பற்ற ஆர்வமாக உள்ளன.
அதிக வாடிக்கையாளர்கள் மற்றும் குறைந்த விலை என்ற இரு ஆதாயம் இதன் மூலம் கிடைப்பதே இதற்குக் காரணம்.
அப்படியே ஒரு காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாக இருந்தால் அதன் விலை ரூ. 40 லட்சத்திற்கும் மேல் ஆகும். அதுவே அசெம்பிளிங் காராக இருந்தால் ரூ. 30 லட்சம் வரையே ஆகும்.
இந்த யோசனையை இந்திய மார்க்கெட்டில் முதன் முதலில் அமல்படுத்தியது ஜப்பானின் டொயோட்டா நிறுவனம்தான். தனது பார்ச்சூனர் கார்களை இப்படித்தான் அது விற்கஆரம்பித்துள்ளது. இதன் மூலம் டொயோட்டாவுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனராம்.
தற்போது எஸ்யூவி எனப்படும் வாகன வகை மார்க்கெட்டில் பார்ச்சூனரின் பங்கு மட்டும் 75 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது சொகுசு கார்களை இதேபோல இந்தியாவில் அசெம்பிளிங் செய்து விற்க திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் புதிய வகை காரான எக்ஸ்1 விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.
இதேபோல, வோக்ஸ்வேகன் டிகுவான், ரெனால்ட் கொலியோஸ், ஆடி க்யூ3, லேன்ட்ரோவர் பிரீலான்டர் 2 ஆகியவையும் அசெம்பிளிங் மூலம் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது.
ஆடி தனது க்யூ5 வகை கார்களை கடந்த வாரம் முதலே அசெம்பிளிங் செய்யும் பணியைத் தொடங்கி விட்டது. மகாராஷ்டிராவில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தில் தனது க்யூ3 கார்களை அசெம்பிளிங் செய்யவும் அது திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








