எப்படி சமாளிக்கப் போகிறதோ மாருதி?

வரலாறு காணாத அளவிலான சரிவை மாருதி சுசுகி நிறுவனம் சந்தித்துள்ளது. அதன் விற்பனை விகிதம் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 50 சதவீதத்திற்கும் கீழே வந்து விட்டது. இதைத் தடுத்து மாருதியை மீண்டும் உயர்வு நிலைக்குக் கொண்டு வருவதற்கான வழிகள் குறித்து மாருதி சுசுகி நிறுவன உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனைகளில் இறங்கியுள்ளனர்.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டான மாருதியை தூக்கி நிறுத்துவது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறதாம்.
இந்திய கார்ச் சந்தையில் இப்போது வெளிநாட்டுக் கார்களின் வருகை பெருமளவில் அதிகரித்து விட்டது. போட்டிகளும் கடுமையாகியுள்ளன. அதில் வலுத்தவன் தப்புவான், இளைத்தவன் பின்தங்குவான் என்ற இயற்கை நியதிப்படி, மாருதியை தூக்கிப் போட்டு விட்டு மற்ற கார்கள் வேகமாக முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன.
உள்ளூர்ச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் மாருதி தடுமாறி மூச்சுத் திணறி வருகிறது.
ஆல்டோ, வேகன் ஆர், ஸ்விப்ட் போன்ற கார்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. ஆனால் காருக்கு ஆர்டர் கொடுத்து விட்டுவாடிக்கையாளர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க தற்போது தனது உற்பத்திப் பிரிவுகளில் கூடுதல் ஷிப்ட்களை உருவாக்கியுள்ளது மாருதி.
அங்கு 24 மணிநேரமும் பணிகள் நடப்பது போல நேரங்களை மாற்றியமைத்துள்ளது. காத்திருப்போருக்கான கால நேரத்தைக் குறைக்கும் முயற்சியே இது.
இதுதவிர விநியோகத்தை பரவலாக்குவதிலும், சேவை வசதிகளை விரிவுபடுத்துவதிலும் அதுதீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான விற்பனைக்குப் பிந்தைய சேவை என்பது உள்ளிட்டவை எளிதில் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அடுத்த ஆண்டு வாக்கில் 10.1 லட்சம் கார்கள் என்ற உற்பத்தி இலக்கை 20 லட்சமாக உயர்த்தும் திட்டத்தை அமல்படுத்தவுள்ளது மாருதி. ரூ. 3000 கோடி மதிப்பிலான திட்டம் இது. மேலும், ரோதக்கில் புதிய ஆய்வு-வளர்ச்சி மையத்தையும் அது நிறுவவுள்ளது.
இத்தனை செய்தாலும் கூட மாருதி தனது வலுவான நிலையை தளர விட்டு விட்டது என்பதே நிதர்சனமாக உள்ளது. புதுப் புது கார்களை ருசிக்கும் மன நிலைக்கு மக்கள் வந்து விட்டனர். இன்று ஒரு கார், நாளை இன்னொரு கார் என்று போக ஆரம்பித்து விட்டனர் மக்கள். மேலும் ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட், ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் காரணமாக மாருதிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
டாடா நானோவின் வருகை மாருதிக்கு மிகப் பெரிய அடி என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்து நிஸ்ஸான் தனது மைக்ராவை வெளியிடப் போகிறது. மேலும் ஹூண்டாயும் தனது 800 சிசி தயார்படுத்தவுள்ளது. டொயோட்டோ அடுத்த ஆண்டில் எடியாஸ் ஹேட்ச்பேக் காருடன் வரவுள்ளது.
சுற்றிலும் போட்டிகள், சூடான சூழல், எப்படி சமாளிக்கப் போகிறதோ மாருதி...?


Click it and Unblock the Notifications








