இரண்டு மடங்காக உயர்ந்த நிஸ்ஸான் மைக்ரா உற்பத்தி

கிட்டத்தட்ட 2500 புக்கிங்குகள் காத்திருப்பதால் இந்த அதிகரிப்பாம். உள்ளூர்ச் சந்தை மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு மைக்ரா ஏற்றுமதியாகி வருவதால் கிராக்கி அதிகரித்து வருகிறது, புக்கிங்குகளும் குவிகின்றன. இதையடுத்தே உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது நிஸ்ஸான் இந்தியா.
ஆரம்பத்தில் முதல் ஆண்டில் 80,000 கார்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது நிஸ்ஸான். இதில் 20 சதவீத கார்கள் இந்தியாவுக்கானது. பிற கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
பெருமளவில் ஆர்டர்கள் குவிவதால் இரண்டு ஷிப்ட் போட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளது நிஸ்ஸான். இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 கார்கள் வரை தயாரிக்க முடியும். கடந்த வாரம் வரை நிஸ்ஸான் இந்தியா ஒரு நாளைக்கு 255 கார்களை மட்டுமே தயாரித்து வந்தது. சென்னை ஓரகடத்தில்தான் நிஸ்ஸானின் தயாரிப்பு ஆலை உள்ளது. ஜூலை மாதம் நிஸ்ஸான் நிறுவனம் 928வது காரை டெலிவரி செய்தது.
இந்தியாவில் உள்ள ஹேட்ச்பேக் பிரியர்களுக்கு ஏற்ற காராக மைக்ரா வந்துள்ளது. இதனால் அதற்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இருப்பினும் கார்களுக்கு ஆர்டர் கொடுத்தால் குறைந்தது 2 மாதம் முதல் அதிகபட்சம் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
நிஸ்ஸான் நிறுவனம் தனது பிராண்ட் அம்பாசடராக பாலிவுட் நடிகர் ரன்பீக்கபூரை நியமித்துள்ளது. ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து ஓரகடம் தொழிற்சாலையில் கார்களை தயாரித்து வருகிறது நிஸ்ஸான். இதற்காக இரு நிருவனங்களும் சேர்ந்து ரூ. 4500 கோடியை முதலீடு செய்துள்ளன. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் கார்களைத் தயாரிக்க முடியும்.
அடுத்த 2 ஆண்டுகளில் நிஸ்ஸான் நிறுவனம் 9 மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. அதில் ஐந்து மாடர்கள், சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








