அக்டோபரில் அறிமுகமாகும் ஹுன்டாயின் புதிய கார் சான்டா எப்.ஈ. எஸ்.யூ.வி.

கடும் போட்டி நிலவும் எஸ்.யூ.வி. மார்க்கெட்டை பிடிப்பதற்காகத் தான் சான்டா எப்.ஈ. அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த கார் ரூ. 22 முதல் 24 லட்சம் வரை விற்கப்படும்.
இது குறித்து ஹுன்டாய் மோட்டார் இந்தியாவின் விளம்பரம் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் அர்விந்த் சாக்சேனா கூறியதாவது,
சான்டா எப்.ஈ. பண்டிகை காலத்திற்கு முன் அக்டோபர்-நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும். இதன் விற்பனை அதிகரித்தால் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் வைத்தே இந்த காரின் பாகங்களை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
ஹுன்டாய் பிரிமியம் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவுள்ளது. சான்டா எப்.ஈ. காரைத் தொடர்ந்து இன்னும் சில மாடல்களையும் அறிமுகம் செய்யவுள்ளது.
7 பேர் அமரக் கூடிய இந்த கார் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டது. எஸ்.யூ.வி. மார்க்கெட்டைப் பிடிக்க இதுவரை ஹுன்டாய் மேற்கொண்ட முயற்சிகள் குறைவான விற்பனையால் வீண் ஆனது.
சிறிய கார் பிரிவில் ஹுன்டாய் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் 7000 ஹுன்டாய் சான்ட்ரோ மற்றும் ஐ10 கார்கள் விற்பனையாகின்றது. ஆனால், இந்நிறுவனத்தின் பிரிமியம் கார்களான சொனாடா, எலன்ட்ரா ஆகியவை சிறிய கார்கள் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டு இறுதியில் புதிய சொனாடா காரை ஹுன்டாய் கொண்டு வர உள்ளது.
இந்தியாவில் எஸ்.யூ.வி. பிரிவு தான் பிரிமியம் கார் பிரிவில் 18 முதல் 20 சதவிகித்துடன் நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய எஸ்.யூ.வி. பிரியர்களை கவர்ந்துள்ளது டொயோடா பார்ச்சசூனர். இந்த காருக்கு வரும் முன் பதிவை பார்த்து டொயோடாவே ஆச்சரியம் அடைந்துள்ளது.
டொயோடா பார்ச்சசூனரின் கடும் போட்டியை சமாளித்தால் தான் ஹுன்டாய் சான்டா எப்.ஈ. காரால் வெற்றி பெற முடியும். புதிதாக அறிமுகமாக உள்ள ஸ்கோடா எடி, நிஸான் முரானோவும் ஹோன்டா சிஆர்- வி, ஷெவர்லே கேப்டிவா, போர்ட் என்டவர், நிஸான் எக்ஸ் டிரெய்ல், மிட்சுபிஷி அவுட்லேன்டர் ஆகிய கார்களுடன் போட்டியில் கலந்து கொள்ள உள்ளது.
வளர்ந்த நாடுகளில் எஸ்.யூ.வி. மார்ககெட் மந்தமாகத் தான் உள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் தான் எஸ்.யூ.வி. உள்ளிட்ட பெரிய கார்களை விற்க கார் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications








