அனைத்து வாகனங்களின் விலையை உயர்த்தும் மகிந்திரா அண்ட் மகிந்திரா!

வாகன உற்பத்தித் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று மகிந்திரா அண்ட் மகிந்திரா.
ஜீப், கார், வேன் என பலவிதமான வாகனங்களைத் தயாரித்து வருகிறது. இப்போது தனது அனைத்துத் தயாரிப்புகளின் விலையையும் உயர்த்தப் போகிறது மகிந்திரா நிறுவனம்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை) கூறுகையில், "உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்கள் கிடைப்பது கடினமாகி வருகிறது. விலைகளும் முன்பைப் போல இல்லை. எனவே எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை" என்றார்.
ஆனாலும் எந்த வாகனத்துக்கு எந்த அளவு விலை உயர்த்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
வாகனங்களின் விலையை மகிந்திரா மட்டும் உயர்த்தவில்லை. இதர முன்னணி நிறுவனங்களான டாடா, வோக்ஸ்வேகன், ஹூண்டாய் போன்றவையும் உயர்த்தியுள்ளன.
டாடா நிறுவனம் தனது 'நானோ' மற்றும் 'ஏரியா'வின் விலையை 1.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது போலோ கார் விலையை 2.9 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஹூண்டாயும் தனது பெரும்பாலான மாடல்களின் விலையை உயர்த்திவிட்டது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் விலைகளை உயர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








