தமிழகத்தில் 12 ஆண்டுக்கு பின் 8000 ஆட்டோக்களுக்கு அனுமதி
சென்னை: சென்னையில் 12 ஆண்டுகளுக்குப் பின் 3,000 புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல பிற மாவட்டங்களில் 4,900 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் 10 பேருக்கு முதல்வர் கருணாநிதி அனுமதி ஆணைகளை வழங்கி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதேபோல மாநிலம் முழுவதும் பெர்மிட் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் போக்குவரத்து துறை மூலம் அனுமதி ஆணை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆட்டோக்கள் அனைத்தும் கேஸ் மூலம் இயங்கக் கூடியவை என்பதால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாது.
அதே போல தற்போது பெட்ரோல் மூலம் இயங்கும் ஆட்டோக்களையும் படிப்படியாக எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களாக மற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதும் பெருகிவரும் போக்குவரத்துத் தேவைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி ஆணைகள் வழங்கிட 12 ஆண்டுகளாக இருந்த தடை 13.5.2010 அன்று ரத்து செய்யப்பட்டது.
இதன்மூலம் ஏழை-எளிய மற்றும் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற வழி பிறந்துள்ளது.
புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி ஆணை வழங்குவதில் இருந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மாநகரில் 55,000 பேரும் பிற மாவட்டங்களில் 23,000 பேரும் என மொத்தம் 78,000 பேர் புதிய ஆட்டோகளுக்கு அனுமதி ஆணைகள் வழங்கிடக் கோரி விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும் போக்குவரத்துத்துறை மூலம் அனுமதி ஆணை அளிப்பதற்கான செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்டோக்கள் அனைத்தும் திரவ எரிவாயு மூலம் இயங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இவற்றால் சுற்றுச் சூழலில் காற்று மற்றும் ஒலி மாசுகள் ஏற்படுவது முழுவதும் குறையும்.
தற்போது பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வரும் ஆட்டோ ரிக்ஷாக்களும் படிப்படியாக திரவ எரிவாயு மூலம் இயங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகரில் மட்டும் வாகனங்களுக்குத் திரவ எரிவாயு நிரப்பும் 27 நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்கள் தேவைக்கேற்ப எரிவாயுவை வழங்கிடவும் தொடர்ந்து விநியோகம் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்டோ ரிக்ஷாக்களை வாங்குவோர்க்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 100 கோடி ரூபாய் அளவுக்குக் கடனுதவி வழங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.
திருச்சியில் கலெக்டர்கள் மாநாடு:
இந் நிலையில் அரசு வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் மாவட்ட ஆட்சித்த லைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
27.8.20101 முற்பகல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் மாநாடும்; அன்று பிற்பகலும் மறுநாள் முழுதும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடும் நடைபெறும்.
இந்த மாநாட்டில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகள், மாவட்டம் தோறும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் பற்றிய விரிவான ஆய்வினை முதல்வர் நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








