புதிய மாருதி ஸ்விப்ட் காருக்கு டீலர்களில் ரகசிய புக்கிங்!

மாருதி கார்களில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றான ஸ்விப்ட் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய ஸ்விப்ட் நீளம், அகலம் மற்றும் உயரத்தில் சற்று கூட்டப்பட்டுள்ளது.
விசாலமான இடவசதி மற்றும் எடுப்பான தோற்றத்துடன் வரவுள்ள புதிய ஸ்விப்ட்டின் வீல்பேசும் 50 மி.மீ., கூட்டப்பட்டுள்ளது. ரிட்ஸ், ஆல்ட்டோ மற்றும் ஏ-ஸ்டார் கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதே கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இதுதவிர, டீசல் மாடலும் வெளிவரவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள புதிய ஸ்விப்ட்டை வாங்குவதற்காக வாடிக்கையாளர் பலர் மாதக்கணக்கில் தவம் கிடக்கின்றனர். இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில டீலர்கள் ரூ.10,000 முன்பணம் பெற்று புதிய ஸ்விப்ட் காருக்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.
அதேவேளை, சென்னையில் உள்ள மாருதி டீலர்கள் புதிய ஸ்விப்ட் காருக்கு முன்பதிவு செய்யவில்லை. புதிய ஸ்விப்ட் எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ஆகிய மூன்று மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போதுள்ள மாடலைவிட புதிய ஸ்விப்ட் விலையில் ரூ.40,000 கூடுதலாக இருக்கும் என தெரிகிறது.
இதேபோன்று, டீசல் மாடல் ரூ.6 லட்சம் விலையில் வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், புதிய ஸ்விப்ட்டின் அறிமுகம் மற்றும் விலை குறித்து மாருதி நிறுவனம், இதுவரை வாய்திறக்கவில்லை.


Click it and Unblock the Notifications








