வதோதராவில் நானோ கார் தீப்பிடித்தது: 7வது சம்பவம்

வதோதரா நகரில் சமீபத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தை காரின் உரிமையாளர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், டாடா மோட்டார்ஸ் இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
வதோதரா நகரை சேர்ந்த மாயன்க் தோஷி என்பவரது நானோ கார்தான் தீப்பிடித்து எரிந்துள்ளது. அவர் தனது நானோ காரில் சப்னபுரா என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எஞ்சினில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
உடனே காரை விட்டு இறங்கி பார்ப்பதற்குள் தீ கார் முழுவதும் பரவ தொடங்கிவிட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீ்ய்ச்சியடித்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். நானோ கார் தீப்பிடித்து எரியும் 7வது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சம்பவங்களால் நானோ காரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட பிரச்னையை சரிசெய்து வரும் வகையில் நானோ கார்களை டாடா மோட்டார்ஸ் திரும்பபெற வேண்டும் என்று ஆட்டோமொபைல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
கடந்த ஆண்டு நானோ கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் அதன் விற்பனை படுபாதளத்திற்கு சென்றது. விளம்பரங்கள், சலுகைகளால் நானோ காரின் விற்பனை தற்போது ஏறுமுகத்தில் உள்ளது. இந்த நிலையில், மீண்டும் நானோ கார் தீப்பீடித்து எரிந்த சம்பவம் நானோ விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








