நடப்பு நிதிஆண்டில் ஆட்டோ சந்தை 11-13% வளர்ச்சி பெறும்: சியாம்

கடந்த நிதிஆண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் பொற்காலமாக அமைந்தது. கார் உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்களின் விற்பனையும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்ததால், இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மொத்த வளர்ச்சி 30 சதவீதமாக பதிவானது.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தற்போது ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வாகன கடன்களுக்கான வட்டி உயர்வு, பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரமற்ற சூழ்நிலை ஆகியவை முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், நடப்பு நிதிஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை 18 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்யும் என இந்திய வாகன உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு (சியாம்) கருத்து தெரிவித்திருந்தது. ஆனால், அந்தளவுக்கு வளர்ச்சியை ஆட்டோ சந்தை எட்டும் வாய்ப்பு குறைந்துள்ளதாக தற்போது சியாம் கூறியுள்ளது.
கடந்த மாதம் கார் விற்பனை கடும் சரிவு கணடதால், ஆட்டோமொபைல் சந்தையின் மொத்த வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நடப்பு நிதி ஆண்டில் ஆட்டோமொபைல் சந்தை 11 முதல் 13 சதவீதம் வளர்ச்சியை மட்டும் பதிவு செய்யும் என சியாம் தெரிவித்துள்ளது.
மேலும், கார் விற்பனை 10 முதல் 12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என்றும், எங்களது முந்தைய கணக்கு தவறாகிவிட்டது என்றும் அது கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








