திருச்சி ஆலையில் விரைவில் டயர் உற்பத்தி: எம்ஆர்எப் அறிவிப்பு

டயர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் எம்ஆர்எப் நிறுவனம் சென்னை அருகேயுள்ள அரக்கோணம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தொழிற்சாலை அமைத்து டயர் உற்பத்தி செய்து வருகிறது. தவிர, கோவா, மேடக், கோட்டயம் மற்றும் புதுச்சேரியிலும் எம்ஆர்எப் டயர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருச்சியில் புதிய டயர் ஆலையை எம்ஆர்எப் அமைத்து வருகிறது. ரூ.900 கோடி முதலீட்டில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. இந்த புதிய ஆலையில் விரைவில் டயர் உற்பத்தியை துவங்க எம்ஆர்எப் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து எம்ஆர்எப் மார்க்கெட்டிங் பிரிவு நிர்வாக துணைத்தலைவர் கோஷி கே. வர்கீஸ் கூறி்யதாவது:
"தமிழகத்தில் உள்ள இரண்டு ஆலைகள் உள்பட அனைத்து ஆலைகளிலும் முழு அளவில் டயர் உற்பத்தி நடைபெற்று வருகிறது. திருச்சியில் கட்டப்பட்டு வரும் ஆலையில் வரும் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் டயர் உற்பத்தி துவங்க திட்டமிட்டுள்ளோம்.
உற்பத்தி துவங்கப்பட்ட 6 முதல் 8 மாதங்களுக்குள் திருச்சி ஆலை முழு அளவு உற்பத்தி திறனை எட்டும். திருச்சி ஆலையும் உற்பத்தியை துவங்கும்போது உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதிக்கான தேவையை நிறைவு செய்ய முடியும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








