எலக்ட்ரிக் கார்களை இணைந்து தயாரிக்க சாங்யாங் மஹிந்திரா முடிவு

நிதி நெருக்கடியில் சிக்கி தள்ளாடிய கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்சை இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் கையகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பதற்காக சாங்யாங் மோட்டார்ஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு மஹிந்திராவும் உதவி புரிந்து வருகிறது.
கார் சந்தையின் எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு, இரு நிறுவனங்களும் இணைந்து எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளன. ரேவா கார்கள் மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழைந்து விட்டாலும், போதிய இடத்தை பிடிக்க முடியாமல் மஹிந்திரா நிறுவனம் விழிபிதுங்கி நிற்கிறது.
இந்நிலையில், சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல கொரண்டோ எஸ்யூவீ காரின் எலக்ட்ரிக் மாடலை இணைந்து தயாரிக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. கொரண்டோவின் எல்க்ட்ரிக் மாடல் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த காரை விரைவில் சந்தைப்படுத்தும் முனைப்பில் இரு நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 4 பேர் அமர்ந்து செல்லத்தக்க வகையில் புதிய ரேவா NXR எலக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கொரண்டோ எல்க்ட்ரிக் மாடலையும் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா ரேவா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில்,"அதிகரித்து வரும் எரிபொருள் விலையால் மாற்று தொழில்நுட்பம் கொண்ட கார்களை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். எனவே, சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்,"என்றார்.


Click it and Unblock the Notifications








