ஹூண்டாய் கார் ஆலையில் புதிய தொழிற்சங்கம் துவங்கும் அதிமுக!

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கட்சியின் தொழிற்சங்க பிரிவான அண்ணா தொழிலாளர் சங்கம பேரவை(ஏடிஎஸ்பி) பன்னாட்டு நிறுவனங்களில் தனது அடித்தளத்தை விரிவுப் படுத்தி வருகிறது.
சென்னை அருகேயுள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஏற்கனவே புதிய தொழிற்சங்கத்தை துவங்கியுள்ள அண்ணா தொழிலாளர் சங்க பேரவை தற்போது ஹூண்டாய் கார் நிறுவனத்திலும் புதிய தொழிற்சங்கத்தை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா தொழிலாளர் சங்க பேரவையின் மாநில பொதுச் செயலாளர் சின்னச்சாமி கூறியதாவது:
"ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இரண்டு தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளும் தொழிலாளர்களுக்கு திருப்தியை தரவில்லை.
எனவே, தொழிலாளர்களின் கருத்துக்களை முன் வைக்கவும், அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் எங்களை அணுகினர்.இதற்காக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தில் புதிய தொழிற்சங்கத்தை துவங்க முடிவு செய்து இருக்கிறோம்," என்றார்.
இந்த நிலையில், அரசியல் சாராத தொழிற்சங்கமாக செயல்படும் யுனைடெட் யூனியன் ஆப் ஹூண்டாய் எம்ப்ளாயீஸ்(யூயூஎச்இ)தொழிற்சங்கத்துக்கு மட்டும் ஹூண்டாய் நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
அதிமுக தொழிலாளர் சங்க பேரவை புதிய தொழிற்சங்கம் துவங்க இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த யுயுஎச்இ சங்க நிர்வாகி ஒருவர்,அரசியல் சார்ந்த அமைப்புகளை ஒருபோதும் ஹூண்டாய் நிர்வாகம் அங்கீகாரம் தராது, இதை கொள்கையாகவே ஹூண்டாய் பின்பற்றி வருகிறது," என்று கூறினார்.
நீண்ட காலமாக போராடி வரும் சிபிஎம்
ஹூண்டாய் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க நீண்ட காலமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. பல போராட்டங்களையும் நடத்தியுள்ளது. இருப்பினும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிமுக சார்பில் தொழிற்சங்கம் அமைக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








