மும்பையில் ரோந்து பணிகளுக்கு நானோ கார்: போலீசார் ஆய்வு

உலகின் மிகக்குறைந்த விலை கார் என்ற பெருமையை பெற்ற நானோ காரின் விற்பனை கணிசமாக சரிந்துள்ளது. இதனால், டாடா மோட்டார்ஸ் மிகுந்த கவலையடைந்துள்ளது.
இந்த நிலையில், டாடா மோட்டார்சுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், மும்பையில் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் ரோந்து செல்வதற்கு நானோ காரை பயன்படுத்துவது குறித்து போலீசார் ஆய்வு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீவிரவாதிகள் மற்றும் கிரிமினல்கள் ஆதிக்கம் மிகுந்த மும்பையில், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மிகப்பெரிய பொறுப்பு போலீசார் வசம் இருக்கிறது. ஆனால், அவர்கள் கடுமையான சீதோஷ்ண நிலைகளில் தங்களது கடமையை கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மோட்டார்சைக்கிளில் ரோந்து செல்வதே சிறப்பானதாக இருக்கும். ஆனால், கடும் தட்பவெப்ப நிலைகளை கருத்தில்க்கொண்டு, அவர்களுக்கு நானோ கார் வழங்குவதற்கு மும்பை போலீஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சந்துபொந்துகளிலும் எளிதாக புகுந்துவந்துவிடும் என்பதாலும், அதிக மைலேஜ் கொடுக்கும் என்பதாலும் நானோவை அவர்கள் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும், மோட்டார்சைக்கிளைவிட காரில் செல்வதன் மூலம் மழை, வெயில் உள்ளிட்ட கடும் சீதோஷ்ண நிலைகளிலும் சிறப்பாக பணியாற்ற முடியும் என்றும் மும்பை போலீசார் கருதுகின்றனர்ய
தற்போது பரீட்சார்த்த அடிப்படையில் ஒரு நானோ காரை போலீசார் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது சிறப்பாக இருந்தால் கணிசமான அளவுக்கு நானோ கார்களை ஆர்டர் கொடுத்து வாங்க மும்பை போலீசார் திட்டமிட்டள்ளனர்.


Click it and Unblock the Notifications








