ஜப்பான் நிலநடுக்கம்: மாருதி கார் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்

கார் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம், ஸ்விப்ட் காருக்கு ஜப்பானிலுள்ள சுஸுகி தொழிற்சாலையிலிருந்து எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்து வருகிறது.
இந்நிலையில், ஜப்பானை நிலைகுலைய செய்துள்ள நிலநடுக்கம் காரணமாக சுஸுகி தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சுனாமியால் துறைமுகங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதம் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளால் ஜப்பானிலிருந்து கார் பாகங்களை இறக்குமதி செய்வதில் மாருதிக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாருதியின் தலைமை பொது மேலாளர் கூறியதாவது:
"கார் தயாரிப்பு பணிகள் வழக்கம்போல் எந்தவித பாதிப்புமின்றி நடக்கிறது. இரண்டு வாரங்களுக்கு தேவையான பாகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாகங்களை இருப்பு பற்றி உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறோம்.
ஜப்பான் நிலநடுக்கம் காரணமாக மாருதியின் ஒரு கோடி கார் உற்பத்தி சாதனை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஜப்பானிலுள்ள சுஸுகி தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர்," என்று கூறினார்.
இதேபோன்று, ஜப்பானை சேர்ந்த மற்றொரு நிறுவனமான ஹோண்டா, அக்கார்டு காருக்கான பாகங்களை ஜப்பான் தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், ஜப்பான் இயற்கை சீரழிவு காரணமாக பாகங்களை இறக்குமதி செய்வதில் ஹோண்டா நிறுவனத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு்ள்ளது.


Click it and Unblock the Notifications








