ஹோண்டா வழியில் 9 மில்லியன் கார்களை திரும்ப பெற டொயோட்டோ முடிவு?

கார்களை விற்பனை செய்ய கார் தயாரிப்பு நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் அளவுக்கு,அதன் தொழில்நுட்ப விஷயங்களில் கவனம் செலுத்தவில்லையோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.பல லட்சம் கொடுத்து கார் வாங்கும்போது வாடிக்கையாளர்கள்,அதன் தயாரிப்பு நிறுவனங்களின் மீது முழு நம்பிக்கை வைத்து வாங்குகின்றனர்.
ஆனால்,தொழில்நுட்ப கோளாறுகளால் அடிக்கடி கார்களை திரும்ப பெறுவதாக பல முன்னணி நிறுவனங்கள் அறிவித்து வருவது,அந்த நிறுவனங்களி்ன மீதுள்ள நம்பிக்கையை குறைத்து வருகிறது.கடந்த காலத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களை திரும்ப பெறும் அறிவிப்பை வெளியிடாமல் இல்லை.ஆனால்,தற்போது கார்களை திரும்ப பெறும் அறிவிப்புகள் தொடர் கதையாகி உள்ளன.
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2008 நவம்பர் முதல் 2009 டிசம்பர் வரை தயாரிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை சிட்டி மாடல் கார்களை திரும்பபெறுவதாக இரு நாட்களுக்கு முன் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து,மற்றொரு ஜப்பான் நிறுவனமான டொயோட்டோவும்,கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் முதல் 2010 பிப்ரவரி வரை உலகம் முழுவதும் விற்பனை செய்த 90 லட்சம் கார்களை திரும்ப பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால்,அந்நிறுவனத்துக்கு ரூ.9,000கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் டொயோட்டோ நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல லட்சம் கார்களை திரும்ப பெற்ற நிலையில்,மீண்டும் அந்நிறுவனம் திரும்ப பெறும் அறிவிப்பை வெளியிட இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications








