ஒரு ரூபாய்க்கு...ஒரு ஏக்கர் நிலம்? பியூஜியோட் சிட்ரோவனுக்கு ஆந்திர அரசு வலை

பிரான்சை நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பியூஜியோட் சிட்ரோவன் இந்தியாவில் மீண்டும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. ரூ.6,000கோடி முதலீட்டில் தமிழகம் அல்லது ஆந்திராவி்ல் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்த நிலையில்,கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்குவதாக சிட்ரோவன் நிறுவனத்திற்கு ஆந்திர அரசு சலுகை அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நெல்லூர் மாவட்டம்,தடா என்ற இடம் அருகில் 1,000 நிலத்தை சிட்ரோவனுக்கு ஒதுக்கி தருவதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளதாக பிரபல பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் கூறியதாவது:
"பல லட்சம் மதிப்புடைய ஒரு ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு ஒரு ரூபாய்க்கு தருவதாக அறிவித்துள்ளதால் சிட்ரோவனின் கவனம் ஆந்திரா பக்கம் திரும்பினால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான உதிரிபாக தொழிற்சாலைகள் உள்ளிட்ட சிறப்பான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
இருப்பினும்,மின் பற்றாக்குறை,தொழிலாளர் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றால் சிட்ரோவன் கவனம் ஆந்திரா பக்கம் திசை திரும்பியுள்ளது. மேலும்,ஆந்திராவில் சிறப்பான சாலை கட்டமைப்பு வசதிகள், தடையில்லா மின்சாரம் ஆகியவை கிடைப்பதால் சிட்ரோவன் ஆந்திரா பக்கம் செல்லவே அதிக வாய்ப்புள்ளது.
நெல்லூர் மாவட்டத்தில் தொழிற்சாலை அமைந்தால்,சென்னை எண்ணூர் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே,சிட்ரோவனின் கவனத்தை ஈர்க்க தமிழக அரசு சிறப்பு சலுகைகள் வழங்கினால் மட்டுமே,சிட்ரோவனின் முதலீட்டை தமிழகம் பெற முடியும்,"என்று அவர்கள் கூறினர்.


Click it and Unblock the Notifications








