2011... கார் நிறுவனங்களால் மறக்கப்பட வேண்டிய ஆண்டு!

இந்த ஆண்டிலும் கார் விற்பனை அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கார் நிறுவனங்கள் மிகுந்த உற்சாகத்தோடு தங்களது வியூகங்கள், இலக்குகளை அறிவித்தன. ஆனால், இதற்கு நேர் மாறாக கார் விற்பனை வளர்ச்சி வெகுவாகவே குறைந்துவிட்டது.இதனால், இந்த ஆண்டு கார் நிறுவனங்களால் மறக்க வேண்டிய ஆண்டாக அமைந்துவிட்டது.
அடுத்தடுத்த பெட்ரோல் விலை உயர்வு, கார் கடனுக்கான வட்டி உயர்வு, மாருதி, ஜெனரல் மோட்டார்ஸ் ஆலைகளில் நடந்த தொழிலாளர் போராட்டங்களும் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணங்கள்.
இருப்பினும், இந்த ஆண்டு பெரும்பாலான நிறுவனங்கள் புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவரந்தன. இதனால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய ஸ்டைல், புதிய வசதிகளுடன் சரியான விலையில் தேர்ந்தெடுக்க வசதியாக பல புதிய கார் மாடல்கள் கிடைத்தன.
ஹூண்டாய் இயான், புதிய ஸ்விப்ட், டொயோட்டோ லிவா, ஹோண்டா பிரியோ மற்றும் மஹிந்திராவின் புதிய குளோபல் எஸ்யூவி என மார்க்கெட்டில் ஏராளமான புத்தம் புதிய மாடல்கள் அறிமுகமாகி கார் மார்க்கெட்டுக்கு புதிய தெம்பை கொடுத்தன.
தவிர, சொகுசு கார் மார்க்கெட் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றன. அந்த மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி ஆகிய நிறுவனங்கள் இருமடங்கு விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன.
இதுதவிர, மஹிந்திரா கூட்டணியிலிருந்து விலகி பிரான்சை சேர்ந்த ரினால்ட் இந்திய கார் மார்க்கெட்டில் தனித்து களமிறங்கியது. இதேபோன்று, மற்றொரு பிரான்ஸ் நிறுவனமான பியூஜியட் நிறுவனமும் ரூ.4,000 கோடி முதலீட்டில் புதிய ஆலை அமைக்க குஜராத்தில் அடிக்கல் நாட்டியுள்ளது.
ஆனால், இருசக்கர வாகன மார்க்கெட் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. மாதத்திற்கு மாதம் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஸ்கூட்டர் மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.
தவிர, சூப்பர் பைக்குகள் மீதான மோகம் இந்தியாவில் அதிகரித்துள்ளதால் உலகின் முன்னணி சூப்பர் பைக் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து இந்திய சந்தையில் கால் பதித்து வருகின்றனர்.
இந்த ஆண்டின் இருசக்கர வாகன மார்க்கெட்டில் முக்கிய நிகழ்வாக 27 ஆண்டுகளாக கூட்டணி நிறுவனமாக திகழ்ந்த ஹீரோ ஹோண்டா தனித்தனியாக பிரிந்தன. இதையடுத்து, முஞ்சால் குழுமத்தின் கீழ் செயல்படும் ஹீரோ நிறுவனம் தனித்து தனது பயணத்தை துவங்கியுள்ளது. மேலும், லண்டனில் ஹீரோ மோட்டா கார்ப் என்ற தனது புதிய பிராண்டை பெயர் மற்றும் சின்னத்தையும் அறிமுகம் செய்து சந்தையில் தனக்கு புது அடையாளம் தேடிக்கொண்டது.
தனது புதிய பிராண்டில் இம்பல்ஸ் ஆன்/ஆப் ரோடு பைக்கையும், மேஸ்ட்ரோ ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்தது. மார்க்கெட் வேகத்துக்கு தக்கவாறு இருசக்கர வாகன நிறுவனங்களும் புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன.
இதுதவிர, ஆட்டோமாபைல் துறையில் முக்கிய பங்களிப்பை கொடுக்கும் பயணிகள் வர்த்தக வாகனங்கள் உள்பட கனரக வாகனங்களின் விற்பனையும் இந்த ஆண்டு தொடர்ந்து நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.
இருப்பினும், கார் விற்பனை வளர்ச்சி அடியோடு குறைந்துள்ளதால் அது ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வரும் ஆண்டில் மீண்டும் கார் விற்பனை சூடுபிடிக்கும் என்று கார் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
வரும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஏராளமான புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இதேபோன்று, புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








