உதிரிபாகங்கள் தட்டுப்பாடு:கார் தயாரிப்பை 70% குறைக்கும் டொயோட்டோ

கடந்த மாதம் ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால், ஆட்டோமொபைல் துறை கடும் பாதிப்பை சந்திக்க நேர்ந்துள்ளது. ஜப்பானிலுள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் முற்றிலும் முடங்கியதால், கார் உதிரிபாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம், இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை 70 சதவீதம் அளவுக்கு குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து டொயோட்டோவின் மார்க்கெட்டிங் பிரிவு துணை மேலாண் இயக்குனர் சந்தீப் சிங் கூறியதாவது:
"உதிரிபாக சப்ளையில் இடர்பாடு ஏற்பட்டுள்ளதால், கார் தயாரிப்பை வெகுவாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 25ந் தேதி முதல் ஜூன் 4ந் தேதி வரை பெங்களுரிலுள்ள இரண்டு தொழிற்சாலைகளில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உற்பத்தி பணிகள் நடைபெறாது.
சாதாரணமாக மாதத்திற்கு இரண்டு தொழிற்சாலைகளிலும் 11,000 கார்கள் தயாரிக்கப்படும். உற்பத்தி பணிகளில் ஏற்படும் பாதிப்பால் மாதத்திற்கு 7,000 கார்கள் தயாரிப்பில் இழப்பு ஏற்படும். இது தற்காலிகமானதுதான். ஜூன் மாதத்திலிருந்து உதிரிபாகங்கள் சப்ளை சீரடையும் என்று கருதுகிறோம்," என்றார்.
உற்பத்தியில் ஏற்படும் இழப்பால், டொயோட்டோவுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதே நிலைமையை மாருதி சுஸுகியும், ஹோண்டாவும் எதிர்நோக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








