உலக சந்தையில் முதலிடத்தை டொயோட்டோ இழக்கும்?-வல்லுனர்கள் கணிப்பு

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம், உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர் என்ற பெருமையுடன் வலம் வருகிறது. இந்நிலையில், ஜப்பான் இயற்கை பேரழிவுகள் காரணமாக, உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,பல்வேறு நாடுகளில் கார் உற்பத்தியை குறைத்துக்கொள்வதாக டொயோட்டோ அறிவித்துள்ளது.
இதனால், உலகின் நம்பர் ஒன் இடத்திலிருந்து டொயோட்டா பின்தங்கும் என்றும், அந்த இடத்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பிடிக்கும் எனவும் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டொயோட்டோ கார்ப்பரேஷன் தலைவர் அகியோ டொயடா கூறியதாவது:
"உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால், ஜப்பான் தொழிற்சாலைகளில் 50 சதவீதமும், வட அமெரிக்க தொழிற்சாலைகளில் 30 சதவீத அளவுக்கு கார் உற்பத்தி நடக்கிறது. கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் கார் டெலிவிரி கொடுக்க நிலை உருவாகியுள்ளது. இதற்காக, அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
கார் தயாரிப்புக்கு தேவையான 150 வகையான எலக்ட்ரானிக் கருவிகள், ரப்பர் பொருட்கள் மற்றும் பெயின்ட் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் கார் உற்பத்தி பணிகள் சீரடையும் என்று கருதுகிறோம். பிரச்சினைகளை முன்கூட்டியே சரிசெய்து கார் உற்பத்தி சீரடையவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.
கடந்த 2007 ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்சை பின்னுக்குத் தள்ளி கார் உற்பத்தியில் டொயோட்டோ முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில், கார் உற்பத்தியை குறைப்பதாக டொயோட்டோ அறிவித்துள்ளதால், மீண்டும் ஜெனரல் மோட்டார்ஸ் கார் உற்பத்தியில் முதலிடத்தை பிடிக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








