இந்திய பார்முலா ஒன் கார் பந்தயத்திற்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பான்சர்

இதற்காக, போட்டியை நடத்தும் ஜேபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் குழுமத்துக்கும், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதையடுத்து, பந்தயத்திற்கான தேவையான பாதுகாப்பு கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, அடுத்த ஆண்டு இந்தியாவில் பார்முலா ஒன் கார் பந்தய டிரைவர்களுக்கான பயிற்சி அகாடமியை துவங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அகாடமியில் சேரும் பார்முலா ஒன் கார் டிரைவர்களுக்கு ஜெர்மனியில் பயிற்சி பெறும் அரிய வாய்ப்பை பெறுவர்.
இதுகுறித்து ஜேபி குழும தலைமை செயல் அதிகாரி சபீர் கவுர் கூறியதாவது:
"பார்முலா ஒன் கார் பந்தயம் மூலம் இந்தியர்களின் கனவு விரைவில் நனவாக இருக்கிறது. இதுவரை 10,000 டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளோம். இந்தியா கிரிக்கெட் விளையாட்டில் பிரபலமாக திகழ்கிறது.
எனவே, பார்முலா ஒன் கார் பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய டிரைவிங் அகாடமியை துவங்க இருக்கிறோம்.
கார் பந்தயத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் விரிவுப்படுத்த வேண்டும். அப்போதுதான் பார்முலா ஒன் கார் பந்தயத்தை பிரபலப்படுத்த முடியும்," என்றார்.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா தலைவர் பீட்டர் ஹோனேய்க் கூறுகையில், " இவ்வளவு சீக்கிரம் இந்தியாவில் பார்முலா ஒன் கார் பந்தயம் நடக்கும் என்று நினைக்கவில்லை. மிகவும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
போட்டிக்கான டிக்கெட்டுகளை மெர்சிடிஸ் ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் வாங்கிகொள்ளலாம். மேலும், பந்தயம் முடிந்த பின் புத் இன்டர்நேஷனல் பந்தய டிராக்கில் எங்களது வாடிக்கையாளர்கள் கார் ஓட்டி பார்க்கும் அரிய வாய்ப்பையும் பெறுவர்," என்றார்.


Click it and Unblock the Notifications








