ரூ.5,000 கோடி முதலீட்டில் குஜராத்தில் கார் ஆலை: ஃபோர்டு முடிவு

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம், சென்னை மறைமலை நகர் அருகே தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அடுத்தடுத்து 8 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமி்ட்டுள்ள ஃபோர்டு, இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கான கார் ஏற்றுமதியையும் அதிகரிக்க உள்ளது.
இதற்காக, ரூ.5,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு அந்த நிறுவனம், குஜராத்தில் தனது புதிய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது. இதுகுறித்து குஜராத் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த நிலையில், அகமதாபாத் அருகிலுள்ள சனந்த் நகரில் உள்ள நானோ கார் தொழிற்சாலைக்கு அருகிலேயே புதிய ஆலைக்கு 400 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தருவதாக குஜராத் அரசு ஃபோர்டிடம் உறுதியளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தனது இரண்டாவது புதிய தொழிற்சாலையை குஜராத்தில் அமைக்க ஃபோர்டு முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் தொழிற்சாலை அமைத்து, கார் உற்பத்தி செய்து வரும் ஃபோர்டு நிறுவனம், குஜராத்தில் ரூ.5,000 முதலீடு செய்ய இருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் தமிழகத்திற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
கடந்த வாரம் சென்னை வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம், தமிழகத்தில் அதிக முதலீடுகள் செய்ய அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ஏற்கனவே சென்னையில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் ஃபோர்டு நிறுவனம் குஜராத் செல்ல முடிவு எடுத்திருப்பது, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய முதலீடு கைநழுவி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த தொழிற்சாலை தமிழகத்தில் அமைந்தால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற ஆதங்கமும் தமிழக ஆட்டோ வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
குஜராத் அரசுக்கும், ஃபோர்டு நிறுவனத்துக்கும் இதுதொடர்பாக இதுவரை முறைப்படி ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை. ஆனால், இன்னும் ஓரிரு நாட்களில் குஜராத் அரசு இதுகுறித்து முறைப்படி அறிவிப்பை வெளியிடும் என்று ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








