கார் ரேட்டிங் முறையை கொண்டு வருவதற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எதிர்ப்பு

சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக்கவும், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையிலும் கார்களுக்கு ரேட்டிங் வழங்கும் விதிமுறைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப் படுகின்றன.
இதேபோன்று, இந்தியாவில் பைவ் ஸ்டார் ரேட்டிங் முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ரேட்டிங் முறைக்கான விதிமுறைகளை வகுப்பதற்காக, ஆட்டோமொபைல் வல்லுனர்கள், தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்தது.
இந்த குழு அளித்த விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து கார் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, புதிய கார்பன் புகை கட்டுப்பாடு குறித்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதிய விதிமுறைகளின் படி ஆண்டுக்கு 2 சதவீத கார்பன் புகை வெளியீட்டை கட்டுப்படுத்தும் வகையில், கார் தயாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் 2015 ம் ஆண்டுக்குள் ஒரு கிலோமீட்டருக்கு 128 கிராம் கார்பன் டை ஆக்சைடு மட்டும் வெளியிடும் வகையில் கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆட்டோமொபைல் துறையினர் ஒரு கிலோமீட்டருக்கு 142 கிராம் கார்பன் வெளியீட்டு அளவை நியமிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்ப்பை தொடர்ந்து சற்று இறங்கிய மத்திய அரசு இறுதியாக ஒரு கிலோமீட்டருக்கு 135 கிராம் கார்பன் புகை வெளியீட்டு அளவாக நிர்ணயித்துள்ளது. ஆனால், கார் உற்பத்தி நிறுவனங்கள் இதற்குசெவிசாய்க்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பிரச்னை குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பின்(எஸ்.ஐ.ஏ.எம்.,) தலைவர் பவன் கோயாங்கோவிடம் கேட்டபோது, தற்போது இந்த பிரச்னையில் கருத்து தெரிவிக்க இயலாது எனறு கூறிவிட்டார்.
பைவ் ஸ்டார் ரேட்டிங் முறையில், லிட்டருக்கு 14 கி.மீ., செல்லும் கார்களுக்கு தரக்கட்டுப்பாட்டில் 5 ஸ்டாரும், லிட்டருக்கு 16 கி.மீ., செல்லும் கார்களுக்கு மூன்று ஸ்டார்களும் கொடுக்கப்படும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
பைவ் ஸ்டார் ரேட்டிங் முறை கொண்டு வரப்பட்டால், எரிபொருள் சிக்கனம், கார்பன் புகை வெளியீடு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு விலையை வாடிக்கையாளர்கள் எளிதில் ஒப்பீடு செய்யலாம். இதனால், விற்பனை பாதிக்கப்படும் என கார் நிறுவனங்கள் கருதுவதாக ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








