அரைநிர்வாண போராட்டம் நடத்த முயன்ற 300 ஜி.எம்.,தொழிலாளர்கள் கைது

குஜாராத் மாநிலும், ஹலோலிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த மாதம் 16ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நி்ர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்நிலையில், தொழிலாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். வதோதரா நகரிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் மனிதவள மேம்பாட்டு பிரிவு இயக்குனர் ராகேஷ் மேத்தா வீடு முன் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று குவிந்ததனர்.
அவரது வீடு முன் அமரந்து நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டம் நடத்திய அவர்கள், பின்னர் மேல் ஆடையை கழற்றி அரைநிர்வாண போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, தகவலறிந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளர்களையும் கைது செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஐஎன்டியுசி சங்கத்தின் செயல் தலைவர் நிகில் மேத்தா கூறுகையில்,"ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடக்குமுறைகள் குறித்து சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பிடம்(ஒ.இ.சி.டி.,)புகார் கொடுத்துள்ளோம். மேலும், நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்,"என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் போலீசாரால் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களும் நேற்று மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications








