தான்சானியா அரசிடமிருந்து அசோக் லேலண்டிற்கு ரூ.173 கோடி பல்க் ஆர்டர்

நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்டிற்கு வெளிநாடுகளிலிருந்து பல்க் ஆர்டர்கள் தொடர்நது கிடைத்து வருகின்றன.
வங்கதேச போக்குவரத்து கழகத்திடமிருந்து டபுள் டெக்கர் பஸ்களை தயாரித்து வழங்குவதற்காக ரூ.105 கோடி மதிப்புடைய ஆர்டரை கடந்த சில மாதங்களுக்கு முன் அசோக் லேலண்ட் பெற்றது. இந்த நிலையில், வெளிநாட்டிலிருத்து அடுத்து ஒரு பல்க் ஆர்டரை அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.
723 டிரக்குகள், பஸ், மற்றும் யுட்டிலிட்டி வாகனங்களை தயாரித்து வழங்குவதற்காக தான்சானியா அரசிடமிருந்து ரூ.173 கோடி மதிப்புடைய பல்க் ஆர்டர் அசோக் லேலண்டிற்கு கிடைத்துள்ளது.
இந்த ஆர்டர் கிடைத்தது குறித்து அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குனர் வினோத் தாசரி கூறியதாவது:
"சர்வதேச அளவில் அசோக் லேலண்ட் தயாரிப்புகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகவே இதை கருதுகிறோம். மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலிருந்து எங்களுக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைக்கின்றது. அதைத்தொடர்ந்து, தான்சானியா அரசிடமிருந்து இந்த பல்க் ஆர்டர் கிடைத்துள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் ஆப்ரிக்க வாகன சந்தையில் அடியெடுத்து வைப்பதற்கு இந்த ஆர்டர் எங்களுக்கு மிக முக்கியமானதாகவே கருதுகிறோம். தான்சானியா அரசிடமிருந்து வந்துள்ள இந்த ஆர்டருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டு முடிவதற்குள் அனைத்து வாகனங்களையும் தயாரித்து சப்ளை செய்துவிடுவோம்,"என்றார்.
அசோக் லேலண்ட் தயாரித்து வழங்கும் டிரக்குகள், பஸ் மற்றும் யுட்டிலிட்டி வாகனங்கள் அனைத்தும் தான்சானியா அரசு துறை சார்ந்த போக்குவரத்தில் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








