ரூ.430 கோடியில் ஓசூரில் பேஸ் பேட்டரி ஆலை:ஆயிரக்கணக்கானோருக்கு வேலை

நாட்டின் வாகன உற்பத்தி வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால், அதை சார்ந்தி்ருக்கும் தொழிற்துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. வாகனங்களுக்கு தேவைப்படும் டயர்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் புதிய தொழிற்சாலைகளை கட்டி வருகின்றனர்.
இதேபோல், வாகனங்களுக்கான பேட்டரி தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக்கருத்தில்கொண்டு, வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் புகழ்பெற்ற பேஸ் பேட்டரீஸ் நிறுவனம், ஓசூரில் பிரம்மாண்ட பேட்டரி ஆலையை கட்டி வருகிறது.
இதுகுறித்து பேஸ் பேட்டரீஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்ய அரோரா கூறியதாவது:
"வாகனங்களுக்கு தேவைப்படும் அனைத்து வகை பேட்டரிகளையும் தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலை கட்டி வருகிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் நிறைவுபெறும். மாதத்திற்கு 3.2 லட்சம் பேட்டரிகளை இந்த தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி செய்ய முடியும்.
இதன் ஆண்டு வர்த்தகம் ரூ.2,000 கோடியாக இருக்கும். முதல்கட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் இன்னும் 18 மாதங்களில் தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கும். முதலில் 2,000 தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவர். கட்டுமான பணிகள் முழுமையடைந்தவுடன் மொத்தம் 3,500 தொழிலாளர்களை கொண்டதாக இந்த தொழிற்சாலை மாறும்," என்றார்.
கடந்த 1987ம் ஆண்டு துவங்கப்பட்ட பேஸ் பேட்டரீஸ் நிறுவனம், பானாசோனிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேட்டரி வினியோகஸ்தராக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2000ம் ஆண்டு பேட்டரி தயாரிக்கும் தொழிலில் தனியாக ஈடுபட துவங்கியது.
தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை மூலம் பேட்டரி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பேஸ் பேட்டரீஸ், ஓசூரில் தனது இரண்டாவது தொழிற்சாலையை அமைக்கிறது. மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையையும் ரூ.60 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








