அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,500 கோடி முதலீடு:போஸ்ச்

வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த போஸ்ச் நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. போஸ்ச் நிறுவனத்துக்கு இந்தியாவில் பல இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளது.
இந்த நிலையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சியையும், தேவையையும் கருத்தில்கொண்டு தனது உற்பத்தி திறனை அதிகரித்துக்கொள்ள போஸ்ச் முடிவு செய்துள்ளது.
இதற்காக, இந்தியாவில் ரூ.2,500 கோடி வரை முதலீடு செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தொகை போஸ்ச் நிறுவனத்தின் நேரடி விரிவாக்கத்திற்காகவும், கூட்டு குழுமங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கும், உதிரிபாகங்கள் வடிவமைப்பு ஆராய்ச்சி பணிகளுக்கும் இந்த தொகையை செலவிட உள்ளதாக போஸ்ச் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர் பிரென்ட் போர் தெரிவித்தார்.
இந்த தொகையில் ஒரு பகுதி சென்னையில் அமைக்கப்படும் புதிய உதிரிபாக தொழிற்சாலைக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications








