ஜனவரியில் மொத்த கார் விற்பனை 31% உயர்வு

எளிய கடன் வசதிகள்,மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத வகையில் எழுச்சி கண்டு வருகிறது.இந்திய பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை ஆட்டோமொபைல் துறை வகிக்கிறது.
குறிப்பாக,கடந்த இரண்டு ஆண்டுகளாக கார் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து பல்வேறு புதிய இலக்குகளை கடந்து வருகிறது.கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது,இந்த ஆண்டு ஜனவரியில் கார் விற்பனை 31 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பின் பிரிதிநிதி ஒருவர் கூறியதாவது:
"உள்நாட்டு சந்தையில் தேவை அதிகரித்ததால்,ஆட்டோமொபைல் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டது.குறிப்பாக,கார் விற்பனை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது.ஜனவரி மாதத்தில் மொத்த கார்விற்பனை மட்டும் 31சதவீதம் உயர்வை கண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை 14.7சதவீதம் அதிகரித்தது.டாடா மோட்டார்ஸ் 15சதவீதமும்,மஹிந்திரா நிறுவனம் 22சதவீதமும் விற்பனை உயர்வை கண்டன.ஆனால்,விலை உயர்வு,வாகன கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு,பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால்,இந்த ஆண்டு கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்காது என்று கருதுகிறோம்.
மேலும்,பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகையை அரசு திரும்ப பெற்றாலும்,அது விற்பனையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்,"என்றார்.


Click it and Unblock the Notifications








