வரும் மார்ச் முதல் கார்களுக்கு மைலேஜ் சார்ட்
டெல்லி: வரும் மார்ச் முதல் கார்களின் மைலேஜ் குறித்த விபரங்களை அட்டவணைப்படுத்தும் வகையில் புதிய விதிமுறையை மத்திய அரசு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், கார் வாடிக்கையாளர்கள் மிகுந்த பயன்பெற வழிபிறந்துள்ளது.
கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்க விரும்பும் காரின் மைலேஜ் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்வதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன. கார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் வாடிக்கையாளர்களிடம் தவறான மைலேஜ் விபரங்களை தெரிவித்து கார்களை விற்பதால் ஏமாற்றப்படும் நிலை உள்ளது.
இதனால், பல வாடிக்கையாளர்கள் கார் வாங்கிய பின்பு பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இந்த குறையை போக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றுவது போன்று, கார்களின் பிரிவுக்கு தகுந்தாற்போல் அனைத்து கார்களையும் வகைப்படுத்தி அதன் மைலேஜ் விபரங்கள் குறித்த பட்டியலை வெளியிட மத்திய அரசு முடி்வு செய்தது.
இதற்கான விதிமுறைகள் வகுப்பது குறித்து கார் உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய அரசு பல முறை ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், புதிய முறைக்கான விதிமுறைகள் வகுக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
வரும் மார்ச் மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறை மூலம், எந்த ஒரு காரும் மைலேஜ் பட்டியலில் இடம்பெறாமல் விற்பனை செய்ய முடியாது. மேலும், கார்களின் வகைக்கு தக்கவாறு அதன் மைலேஜ் குறித்த விபரங்களை அரசாங்கமே சான்றளித்து பட்டியலாக வெளியிட உள்ளது.
இதனால், வாடிக்கையாளர்கள் மைலேஜ் குறித்த விபரங்களை குழப்பமில்லாமலும், அடுத்தவர் உதவி இல்லாமலும் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








