தேசிய வாகன வாரியம் அமைக்க மத்திய அரசு தீவிரம்

உலகின் இரண்டாவது பெரிய வளரும் ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா மாறியுள்ளது. இருப்பினும், ஆட்டோமொபைல் துறைக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதால் பல்வேறு இடர்பாடுகளை ஆட்டோமொபைல் துறை சந்தித்து வருகிறது.
மேலும், ஆட்டோமொபைல் துறை சம்பந்தமான கோட்பாடுகளை உருவாக்கி செயல்படுத்துவதிலும், அத்துறைக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும் அரசுக்கும் பல இடர்பாடுகள் ஏற்படுகிறது.
இந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியை புதிய பரிமாணத்தில் கொண்டு செல்லவும், அரசுக்கும் ஆட்டோமொபைல் துறைக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்கும் வகையிலும் தேசிய வாகன வாரியத்தை (என்ஏபி) அமைக்க மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேசிய வாகன வாரியம் உதயமாகும் என்று மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த புதிய அமைப்பு அரசுக்கும், ஆட்டோமொபைல் துறைக்கும் இணைப்பு பாலமாக செயல்படும்.
ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி மட்டுமல்லாது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், சுற்றுச்சூழலுக்கு சாதகமான எலக்ட்ரிக் கார் திட்டங்களை செயல்படுத்துவதிலும் தேசிய வாகன வாரியம் முக்கிய பணியாற்றும். இதன்மூலம், ஆட்டோமொபைல் துறை பரிணாமத்தில் அடியெடுத்து வைக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








