சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற ஹூண்டாய் தொழிலாளர்கள் கைது

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தின் 32 தொழிலாளர்களை ஹூண்டாய் நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்தது.
இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் 18 பேர் தங்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரி நேற்று ஹூண்டாய் கார் ஆலை முன் போராட்டம் நடத்த முயன்றனர்.
இதையடுத்து, போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் முத்துக்குமார் கூறியதாவது:
"தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று கருதுகிறோம். அவ்வாறு விடுதலை செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்வோம்," என்று கூறினார்.
கடந்த ஆண்டு நடந்த வேலைநிறுத்தப் போராட்த்தின்போது தமிழக தொழிலாளர் நலத்துறை, ஹூண்டாய் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை திரும்ப பெறுவதாக ஹூண்டாய் ஒப்புக்கொண்டதாக தொழிலாளர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் கடந்த ஆண்டு நடந்த வேலைநிறுத்தத்தின்போது குற்றங்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் சட்டப்படி நடவடிக்கையை எதிர்நோக்கி உள்ளதாகவும் ஹூண்டாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கார் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாருதி நிறுவனம் தற்போதுதான் தொழிலாளர் பிரச்னையில் சற்று விடுபட்டுள்ள நிலையில், கார் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் தற்போது தொழிலாளர் பிரச்னையை எதிர்நோக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








