டெல்லியில் டீசல் கார்களுக்கான பதிவு கட்டணம் அதிகரிப்பு

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் டீசல் கார்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. பல்வேறு கார் நிறுவனங்களும் டீசல் கார் உற்பத்தியை கூட்டியுள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம ஒருபடி மேலே போய் பெட்ரோல் கார் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்கள் சுற்றுச்சூழலை அதிக மாசு ஏற்படுத்துவதாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஏற்கனவே கூறியிருந்தார். எனவே, டீசல் கார் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதற்கான பதிவுக்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டீசல் கார்களுக்கான பதிவுக்கட்டணத்தை டெல்லி மாநில அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இதனால், டெல்லியில் டீசல் கார்களின் விலை உயர்கிறது. சாதாரண ரகத்தை சேர்ந்த கார்களுக்கான பதிவுக்கட்டணம் தற்போது 4 சதவீதம் முதல் 7 சதவீதமாக இருந்து வந்தது. ஆனால், இனி 5 முதல் 8.75 சதவீதம் வரை கார் விலையில் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.
இதேபோன்று, சொகுசு கார்களுக்கான விலையில் 10 சதவீதமாக இருந்த பதிவுக்கட்டணம் தற்போது 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்த விலை கொண்ட டீசல் கார்களுக்கு ரூ.6,000 வரையிலும், சொகுசு கார்களுக்கு ரூ.30,000 வரையிலும் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








