டீசல் கார்கள் மீது கூடுதல் வரியை சுமத்த வேண்டாம்: பிரணாபுக்கு பிரபுல் கடிதம்

பெட்ரோல் கார்களை விட டீசல் கார்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படு்த்துவதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி அரசு டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதித்தது.
இதேபோன்று, டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்க மத்திய அரசும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், டீசல் கார்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடித்தத்தில் குறிப்பிடுகையில்,"அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டீசல் கார்கள் அதிக மைலேஜ் கொடுப்பதால் டீசல் கார்கள் மீது அதிக வரி விதிக்கப்படுவதில்லை. இதனால், பெருமளவு எரிபொருள் மிச்சப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக, குறைந்த கார்பன் புகையை வெளியிடும் வகையிலும், அதிக மைலேஜ் கொடுக்கும் வகையிலும் கார் டீசல் எஞ்சின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதேபோன்று, நம் நாட்டிலும் டீசல் எஞ்சின் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்க திட்டம் எதுவும் இருந்தால் அதை நிதி அமைச்சகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
தவிர, 4 மீட்டர் நீளம் அல்லது 1500 சிசி திறனுக்கு மேல் எஞ்சின் கொண்ட கார்களுக்கு கூடுதலாக ரூ.15,000 வரி விதிக்கப்படுவதையும் நீக்க வேண்டும்," என்று குறி்ப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்டதால் மார்க்கெட்டில் டீசல் கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேவையை கருதி புதிய டீசல் கார்கள் மார்க்கெட்டில் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் கார் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
டீசல் கார்கள் மீது அதிக வரி விதிக்கும் சூழ்நிலையை கருதி, தனது டீசல் எஞ்சின் தொழிற்சாலை திட்டத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் தள்ளிப்போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








