தாழ்தள நகர பேருந்துகளை தயாரித்து வழங்கும் ஐஷர்

குஜராத் போக்குவரத்து கழகத்திற்கு முதன் முறையாக தாழ்தள நகரப் பேருந்துகளை அந்த நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
நாட்டின் முன்னோடி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஐஷர் வர்த்தக ரீதியிலான வாகனங்களை தயாரித்து வருகிறது.
மினிபஸ், டிரக் மற்றும் இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அந்த நிறுவனம் முதன் முறையாக தாழ்தள நகரப் பேருந்து தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.
குஜராத் போக்குவரத்து கழகத்திடமிருந்து ஆர்டர் பெற்று 10 தாழ்தள நகரப் பேருந்துகளை அந்த நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
காந்தி நகரில் சமீபத்தில் நடந்த விழாவில் தாழ்தள பேருந்துகளை ஐஷர் நிறுவன விற்பனைப் பிரிவு தலைவர் ஜி. சேகர், அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் வாஜுபாய் வகேலாவிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜி.சேகர் கூறியதாவது:
"குஜராத் மாநில அரசும், போக்குவரத்து கழகமும் இந்த வாய்ப்பை வழங்கியதற்கு ஐஷர் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். மாநில போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளில் ஐஷர் நிறுவனமும் பங்கு பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த புதிய தாழ்தள பேருந்துகள் பின்புறம் எஞ்சின் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தாழ்தள பேருந்துகள் என்பதால் மக்கள் எளிதாக ஏறி, இறங்க முடியும். மேலும், நிறுத்தங்களில் நின்று செல்வதற்கான நேரமும் வெகுவாக மிச்சப்படும்.
நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகள் சொகுசாகவும், பாதுகாப்பான பயணத்தையும் வழங்கும்," என்றார்.
கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தாழ்தள நகர பேருந்துகளை ஐஷர் நிறுவனம் அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், குஜராத் போக்குவரத்து கழகத்திடமிருந்து 20 தாழ்தள பேருந்துகளை தயாரித்து வழங்கும் ஆர்டரை பெற்றது. தற்போது முதல் கட்டமாக 10 பேருந்துகளை வழங்கியுள்ள அந்த நிறுவனம் விரைவில் மீதமுள்ள 10 பேருந்துகளையும் தயாரித்து வழங்க உள்ளது.


Click it and Unblock the Notifications








