ரூ.3.5 கோடியில் எப்எப் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்துகிறது ஃபெராரி

உலக அளவில் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த ஃபெராரி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களுக்கு முன் காலூன்றியது. டெல்லி, ஜன்பத் பகுதியில் ஷோரூம் அமைத்து தனது கார்களை ஃபெராரி விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய உயர்த்தட்டு மக்களின் நாடித்துடிப்பை அறிந்து கொண்டு புதிய கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் தனது எப்எப் ஸ்போர்ட்ஸ் காரை விரைவில் அறிமுகப்படுத்துகிறது.
வரும் 28ந் தேதி முதல் 30ந் தேதி வரை டெல்லி அருகே நொய்டாவில் நடைபெற உள்ள இந்தியாவில் முதல் பார்முலா 1 கார் பந்தயம் நடந்து முடிந்த மறுநாளே தனது எப்எப் ஸ்போரட்ஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஃபெராரி.
போர்ச்சே கரீரா, அஸ்டன் மார்ட்டின் ரேபிட் ஆகிய சூப்பர் கார்களுக்கு போட்டியை கொடுக்கும் விதத்தில் இந்த புதிய காரை ஃபெராரி அறிமுகப்படுத்துகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட எப்எப் காரில் 6262சிசி திறன் கொண்ட வி-12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த எஞ்சின் 8,000 ஆர்பிஎம் வேகத்தில் 660 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது மணிக்கு அதிகபட்சம் 335 கிமீ வேகத்தில் செல்லும். வெறும் 3.7 வினாடிகளில் இந்த கார் 100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது.
டெல்லியிலுள்ள ஷோரூமிலேயே இந்த காரின் அறிமுக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஃபெராரியின் விளம்பர தூதர்களாக செயல்படும் நட்சத்திரங்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் டெல்லியில் ரூ.3.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








