9 பேர் பயணம் செய்யும் வேனை அறிமுகப்படுத்தும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

டெம்போ டிராவலர் மூலம் புகழ்பெற்ற ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஃபோர்ஸ் ஒன் என்ற புத்தம் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. அட்டகாசமான வடிவமைப்புடன் வந்துள்ள எஸ்யூவி மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், வேன் உள்ளிட்ட புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தப்போவதாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதற்காக, ரூ.750 கோடியை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் முதலீடு செய்கிறது.
ஐதராபாத்தில் ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியை அறிமுகம் செய்யும் விழா நடந்தது. இதில் போர்ஸ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் பிரசன் பிரோடியா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
"புதிய ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியை வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்காக ரூ.250 கோடியை முதலீடு செய்தோம். இதேபோன்று, மேலும் பல புதிய மாடல்களை வடிவமைக்கவும், மேம்பாட்டுக்கும் ரூ.750 கோடியை முதலீடு செய்ய உள்ளோம்.
தற்போது மெர்சிடிஸ் நிறுவனத்துடன் இணைந்து 9 பேர் பயணம் செய்யும் புதிய வேனையும், 2 சிறிய வர்த்தக வாகனங்களையும் வடிவமைத்து வருகிறோம். இந்த மாடல்கள் வரும் டெல்லி கண்காட்சியில் பார்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்களும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் வைக்க திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








