பார்முலா-1 பந்தயத்திற்கு மருத்துவக் குழு, 2 ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் ரெடி

அடுத்த மாதம் 30ந் தேதி டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் இந்தியாவின் முதல் பார்முலா-1 கார் பந்தயம் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 28 மற்றும் 29ந் தேதி தகுதிச்சுற்று போட்டிகளும், 30ந் தேதி இறுதி சுற்று பந்தயங்களும் நடக்கின்றன.
இதில், உலகின் முன்னிலை கார் பந்தய வீரரகள் பங்கேற்கின்றனர். இதனால், கார் பந்தய ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையல், போட்டிக்கான ஏற்பாடுகளை ஜேபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மும்முரமாக செய்து வருகிறது.
போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த நிறுவனம் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது. போட்டிகளில் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் வீரர்களுக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக, நொய்டாவில் உள்ள ஃபோர்ட்டிஸ் மற்றும் அப்போலோ மருத்துவமனைகளை சேர்ந்த 250 மருத்துவர்களுக்கு பார்முலா-1 கார் பந்தய சர்வதேச கூட்டமைப்பின்( எப்ஐஏ)விதிகளின்படி, போட்டி நடைபெறும் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக ஜேபி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், விபத்தில் சிக்கும் வீரர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அனைத்து நவீன மருத்துவ கருவிகள் மற்றும் சிகிச்சை வசதிகளை கொண்ட 2 ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்றும் ஜேபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








