ஜெனரல் மோட்டார்ஸ் ஸ்டிரைக் வாபஸ்: தொழிலாளர்கள் பணிக்கு திரும்புகிறார்கள்

கடும் பணிச்சுமை, டீலர்களுக்கு பணியிட மாற்றம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநிலம், ஹலோலில் உள்ள ஜெனரல் மோட்டார்சின் கார் தொழிற்சாலையை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த மார்ச் 16ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர்.
இந்த நிலையில், வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்புமாறு ஜெனரல் மோட்டார்ஸ் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, கடந்த மார்ச் 25ந் தேதி 700 தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வந்தனர்.
தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மொத்தம் 2,500 கார்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால், பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டது. நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தகள் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில், நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று மாநில தொழிலாளர் நல கமிஷனர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக ஜெனரல் மோட்டார்ஸ் துணைத் தலைவர் பாலேந்திரன் கூறுகையில்,"பிரச்னைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளதால், வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புகின்றனர்,"என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








