ஸ்பார்க்கை விட குறைந்த விலையில் புதிய சிறிய கார்: ஜிஎம் தகவல்

மார்க்கெட் போட்டி காரணமாக அனைத்து கார் நிறுவனங்களும் புதிய கார் மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகின்றன.
இதனால், அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய கார் மாடல்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் அடுத்த ஆண்டு 5 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
முதலாவதாக, குறைந்த விலை கொண்ட புதிய கார் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் செவர்லே ஸ்பார்க் காரைவிட இந்த புதிய கார் விலை குறைந்ததாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நிறுவனம் தற்போது செவர்லே பிராண்டில் ஸ்பார்க், பீட், ஏவியோ, யுவா, குரூஸ் மற்றும் தவேரா ஆகிய கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் சில மாடல்களின் விற்பனையை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக புதிய மாடல்களை நிலை நிறுத்தவும் ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் கார்ல் சிலிம் கூறியதாவது:
"அடுத்த ஆண்டு புதிதாக 5 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். 1.0 லிட்டர் முதல் 1.5 லிட்டர் வரை எஞ்சின்கள் கொண்டதாக புதிய கார் மாடல்கள் இருக்கும்.
தவிர, சமீபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட பீட் எலக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடலை வர்த்தக ரீதியில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
பெங்களூரில் உள்ள எங்களது கார் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பீட் எலக்ட்ரிக் காரை வடிவமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
ஆனால், எலக்ட்ரிக் காரை வடிவமைப்பதில் அதிக நடைமுறை சிக்கல்கள் மற்றும் பணிகள் உள்ளன.
முதலில், பீட் எலக்ட்ரிக் காருக்கான பேட்டரி தொழில்நுட்பம் அமெரிக்காவிலுள்ள கார் வடிவமைப்பு மையத்திலிருந்து பெறப்பட்டுள்ளன.
முழுக்க முழுக்க இந்திய வடிவமைப்பில் உருவாகும் இந்த பீட் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிமீ செல்லும் வசதி கொண்டதாக இருக்கும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








