தொழிலாளர்கள் 383 பேருக்கு ஒரே நாளில் பதவி உயர்வு: ஜி.எம் தாராளம்

குஜராத் மாநிலம் ஹலோலில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி அந்த தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, 6மாதங்களில் இரண்டாவது முறையாக சில மாதங்களுக்கு முன் மீண்டும் 51 நாட்கள் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாநில தொழிலாளர் நலத்துறை தலையீட்டின் பேரி்ல் இரண்டு வேலைநிறுத்த போராட்டங்களும் தீர்வு காணப்பட்டன.
இந்த இரண்டு முறை வேலைநிறுத்த போராட்டங்களால், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், அந்த நிறுவனத்திற்கு பல கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில், அந்த தொழிற்சாலையில் வேலைபார்க்கும் 900 தொழிலாளர்களில், நிரந்தர தொழிலாளர்கள் 383 பேரை இந்த ஆண்டு ஏக்தம்மில் பதவிஉயர்வு கொடுத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நிரந்தர தொழிலாளர்கள் மீது ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகம் அதிருப்தியில் இருந்ததாக கருதப்பட்டது.
மேலும், இந்த ஆண்டு ஊதிய உயர்வு கிடைக்குமா என்று தொழிலாளர்கள் கருதியிருந்த நிலையில், பதவி உயர்வு கொடுத்து தொழிலாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் துணைத்தலைவர் பாலேந்திரன் கூறுகையில்," கார் உற்பத்தி நிறுவனங்களிலேயே தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது எங்கள் நிறுவனம்தான். தொழிலாளர்களுக்கு எந்த குறையும் வைக்கக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்," என்று கூறினார்.
வேலைநிறுத்ததால் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இருந்த கசப்புணர்வை போக்கும் விதமாகவும், தொழிற்சாலையில் சுமூக சூழ்நிலையை உருவாக்கவும் ஜெனரல் மோட்டார்ஸ் பதவிஉயர்வு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








