எலக்ட்ரிக் கார்களுக்கு 20% மானியம்- விற்பனை இலக்கை அதிகரித்த மஹிந்திரா ரேவா

சுற்றுச் சூழலை பாதிக்காத பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திய பெருமை மஹிந்திராவையே சேரும். ஆனாலும், அதிக விலை, நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இல்லாததால் எலக்ட்ரிக் கார்களுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.
இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில், எலக்ட்ரிக் கார்கள் விற்பனையை ஊக்கப்படுத்தும் விதமாக, ஏசி பொருத்தப்படாத எலக்ட்ரிக் கார்களுக்கு 20 சதவீதம் மானியம் வழங்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.
இதனால், எலக்ட்ரிக் கார்களின் விலையில் வாடிக்கையாளர்கள் கணிசமான பயனடையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எலக்ட்ரிக் கார் விற்பனை அதிகரிக்கும் என்பதால், மஹிந்திரா ரேவா நிறுவனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், நிறுவனத்தை விரிவுபடுத்தும் பணிகளையும் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா ரேவா நிறுவனத்தின் தொழில்நுட்ப துறை தலைவர் கூறியதாவது:
"கடந்த நவம்பர் மாதம் முதல் ஏசி இல்லாத எலக்ட்ரிக் கார்களுக்கு 20 சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனால், எலக்ட்ரிக் கார்களின் விற்பனை கணி்சமாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார்கள் ரூ.3.7 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசு வழங்கும் மானியத்தால், மொத்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதனால், எலக்ட்ரிக் கார்கள் விற்பனை அதிகரிக்கும்.இந்த சலுகை மூலம் நடப்பு நிதியாண்டில் இதுவரை 140 வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் சலுகை வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி எங்களையும் ஊக்கப்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு 4,000 கார்களை விற்பனை செய்து வருகிறோம். அரசின் சலுகையையடுத்து, அடுத்த ஆண்டு முதல் 5,000 கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். வரும் காலங்களில் எலக்ட்ரிக் கார்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், ரூ.200 கோடி முதலீட்டில் பெங்களுரில் புதிதாக மற்றொரு தொழிற்சாலை கட்டி வருகிறோம். மேலும், டீலர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








