கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்!

இதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைப்படி பணவீக்கத்தை கட்டுப்படுத்த பயணிகள் காருக்கான டீசல் மானியத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.
இப்போது டீசலுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. பெட்ரோலுக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துவிட்டு, அதன் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவி்ட்டது. இதையடுத்து பெட்ரோல் விலை கடந்த ஒரு வருடத்தில் 14 முறை உயர்த்தப்பட்டு, 25 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், டீசல் விலையை உயர்த்தினால் லாரி வாடகை, ரயில் போக்குவரத்துக் கட்டணமும் உயரும் என்பதால், டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதற்காக ஒரு லிட்டருக்கு ரூ.6.82 மானியம் கொடுத்து வருகிறது.
இப்போது கார்களுக்கு மட்டும் இந்த மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை ரத்து செய்தால், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 அதிகரிக்கும்.
இதன்மூலம் டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. தனியார் பயன்படுத்தும் டீசல் கார்களுக்கான டீசல் விலை உயர்வாகவும், லாரி-வேன் உள்ளிட்டவற்றுக்கான டீசல் விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிகிறது.
அதன் படி டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடம் விட்டு விட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
தற்போது இந்தியாவில் மொத்த டீசல் உற்பத்தியில் 37 சதவீதத்தை லாரிகளும், 15 சதவீதத்தை கார்களும், 12 சதவீதத்தை விவசாயத்துறையினரும், 12 சதவீதத்தை பஸ்களும், 10 சதவீதத்தை தொழிற்சாலைகளும், 8 சதவீதத்தை மின் உற்பத்தி நிறுவனங்களும், 6 சதவீதத்தை ரயில்வேத் துறையும் பயன்படுத்துகின்றன. விவசாயிகளுக்கான டீசல் பயன்பாட்டில் மோட்டார்கள், டிராக்டர்கள், விவசாயக் கருவிகளுக்கான டீசல் அடங்கும்.
தற்போது சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.43.95-க்கு விற்கப்படுகிறது. ரூ.7 அதிகரிக்கப்பட்டால் டீசல் விலை ரூ.50.95 ஆக உயரக்கூடும். ஹைஸ்பீடு டீசல் ஒரு லிட்டர் ரூ.49.20 ஆக உள்ளது. இதன் விலை ரூ.56.20 ஆக உயர வாய்ப்புள்ளது.
பெட்ரோல் விலை உயர்வாக இருப்பதால் டீசல் கார்களின் விற்பனை கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எல்லா கார் நிறுவனங்களும் டீசல் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந் நிலையில் கார்களுக்கான டீசல் விலையை அதிகரித்தால், டீசல் கார்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என கார் உற்பத்தி நிறுவனங்கள் கூறி்யுள்ளன.
மானியம் ரத்து செய்யப்பட்டால், கார்களுக்கான டீசல் விலையும் பெட்ரோலுக்கு இணையாக உயரும் அபாயமும் உள்ளது.
இதனால் அடுத்ததாக இயற்கை எரிவாயுவால் (CNG) இயங்கும் கார்களுக்கு புதிய டிமாண்ட் ஏற்படலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








