பிரையோவை முன்கூட்டியே அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டம்?

இந்தியாவில் சிறிய ரக ஹேட்ச்பேக் கார்களுக்கு அதிக மவுசு உள்ளது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. சொகுசு கார்களை மட்டும் தயாரித்து வந்த நிறுவனங்கள், சிறிய ரக கார் இல்லாவிட்டால், இந்திய மார்க்கெட்டில் காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்துவிட்டன.
இந்திய மார்க்கெட்டில் நீண்ட காலமாக இருக்கும் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், ஏற்கனவே ஜாஸ் என்ற ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், அதிக விலை காரணமாக ஜாஸ் இந்திய மார்க்கெட்டில் எடுபடவில்லை.
இதனால், எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் விரக்தியில் இருந்த ஹோண்டா, இந்திய மார்க்கெட்டின் தேவையை கருத்தில்கொண்டு பிரையோ என்ற ஹேட்ச்பேக் கான்செப்ட் மாடலை கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த கார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.
மேலும், வரும் செப்டம்பர் மாதத்தில் பிரையோவை டெலிவிரி கொடுக்க ஹோண்டா திட்டமிட்டிருந்தது. ஆனால், மற்றொரு ஜப்பானிய நிறுவனமான டொயோட்டோ, தனது புதிய சிறிய ரக காரான லிவாவை இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்தது.
இதையடுத்து, பந்திக்கு முந்தி என்ற கணக்கில், பிரையோ காரை முன்கூட்டியே அறிமுகப்படுத்த ஹோண்டா திடீர் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டோ நிறுவனத்தின் லிவா கார் அறிமுகம் செய்வதற்கு ஒரு வாரம் முன்னதாக, வரும் 17ந்தேதி பிரையோவை முறைப்படி அறிமுகம் செய்ய ஹோண்டா நாள் குறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல்களை ஹோண்டா நிறுவனம் மறுக்கவும் இல்லை;ஆமோதிக்கவும் இல்லை.இந்திய வாடிக்கையாளர்கள் கையில் இந்த மாதத்திலில் இருந்தே பிரையோ பிடிகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரையோவின் கவர்ச்சிகரமான ஹைகிளாஸ் வடிவமைப்பு இந்தியர்களிடையே ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.இதன் விலை ரூ.5 லட்சத்திற்குள் இருக்கலாம் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








