சென்னையில் சான்டா பீ காரை அசெம்பிள் செய்ய ஹூண்டாய் முடிவு

ஹூண்டாய் நிறுவனம் தற்போது கொரியாவிலிருந்து சான்டா பீ காரை இறக்குமதி செய்து விற்று வருகிறது. ஆனால், கார் இறக்குமதி செய்வதற்கு 110 சதவீத இறக்குமதி வரி செலுத்த வேண்டி இருப்பதால், மற்ற எஸ்.யூ.வீ. கார்களைவிட சான்டா பீ யின் விலை அதிகமாக உள்ளது.
எஸ்.யூ.வீ. ரக கார்களில் டொயோட்டோ பார்ச்சூனர் ரூ.20.1 லட்சம் விலையிலும், ஃபோர்டு என்டவர் ரூ.17 லட்சம் முதல் 20 லட்சம் விலையிலும் விற்கப்படுகிறது. ஆனால், ஹூண்டாயின் சான்டா பீ கார் ரூ.23 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுவதால், அதன் விற்பனை மந்தம் தட்டியுள்ளது.
இந்த நிலையில், சான்டா பீயின் விற்பனை அதிகரிப்பதற்கு, குறைவான விலையில் களமிறக்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இதற்கு மாற்று வழி தேடிய அந்த நிறுவனம், உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவிலேயே சான்டா பீயை அசெம்பிள் செய்ய முடிவெடுத்துள்ளது.
ஹூண்டாய் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு இயக்குனர் அர்விந்த் சக்சேனா கூறியதாவது:
"சான்டா பீயின் விற்பனையை வெகுவாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். தற்போது மாதத்திற்கு 100 சான்டா பீ கார்கள் விற்பனையாகிறது. இதை மாதத்திறக்கு 150 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம். கார் இறக்குமதி செய்வதற்கு 110 சதவீத வரி செலுத்த வேண்டி உள்ளது.
எனவே, சென்னை தொழிற்சாலையில் சான்டா பீயை அசெம்பிள் செய்ய உள்ளோம். இதன்மூலம், சவாலான விலையில் சான்டா பீயை விற்பனை செய்ய முடியும். வரும் ஜூனிலிருந்து சான்டா பீயின் அடுத்த கட்ட புக்கிங்கை துவங்க திட்டமிட்டுள்ளோம். ஆண்டுக்கு 1,400 சான்டா பீ கார்களை விற்க இலக்கு வைத்துள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








