விற்பனை மந்தம்: டீசல் ஐ-10 திட்டத்தை ஒத்திவைத்தது ஹூண்டாய்

ஹூண்டாய் கார்களில் ஐ-10 ஹேட்ச்பேக் கார் அந்த நிறுவனத்தின் விற்பனையில் முன்னிலை வகித்து வருகிறது. வாடிக்கையாளர் மத்தியிலும் ஐ-10 நன்மதிப்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், பெட்ரோல் விலை அதிகரிப்பால் டீசல் கார்களுக்கான மவுசும், தேவையும் மார்க்கெட்டில் அதிகரித்து வருகிறது.
இதனைக் கருத்தில்க்கொண்டு ஐ-10 காரின் டீசல் மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டது. அடுத்த ஆண்டுக்குள் ஐ-10 டீசல் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், இந்தியாவில் ரூ.400 கோடி முதலீட்டில் புதிய டீசல் எஞ்சின் ஆலையை அமைக்க இருப்பதாகவும் கடந்த ஆண்டு ஹூண்டாய் அறிவி்த்தது. 1.2 லிட்டர், 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்கள் புதிய ஆலையில் உற்பத்தி செய்யவும் ஹூண்டாய் திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் ஹூண்டாய் கார் விற்பனை ஏழரை சதவீதம் சரிந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் களமிறக்கப்பட்ட இயான் கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையிலும் கார் விற்பனை குறைந்தது ஹூண்டாயை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டது.
இதையடுத்து, புதிய டீசல் எஞ்சின் ஆலை கட்டும் திட்டத்தை ஒத்திப்போட்டுள்ளது ஹூண்டாய். இதனால், அடுத்த ஆண்டுக்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ-10 டீசல் மாடல் மார்க்கெட்டிற்கு வருவது ஓரிரு ஆண்டுகள் தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








