அடுத்த 5 ஆண்டுகளில் 15 புதிய கார் மாடல்கள்: ஹூண்டாய் திட்டம்

நாட்டின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் திகழ்கிறது. இந்த நிலையில், கடந்த ஓர் ஆண்டாக ஹூண்டாய் கார் விற்பனை கடும் சரிவு கண்டு வருகிறது.
விற்பனையை அதிகரிக்க அந்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தும் புண்ணியமில்லை. இந்த நிலையில், மார்க்கெட் பங்களிப்பை தக்கவைத்துக்கொள்ளவும், கார் விற்பனையை அதிகரிக்கவும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதே ஒரே வழி என அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் 15 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் புளூயிடிக் வெர்னாவை ஹூண்டாய் அறிமுகம் செய்தது. மார்க்கெட்டில் புதிய வெர்னாவுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில், வெர்னாவைவிட பிரிமியம் செடான் கார்களை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. ஐ35 அல்லது ஐஎக்ஸ்35 செடான் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்திய மார்க்கெட்டில் இதுவரை ஹூண்டாய் வசம் பிரிமியம் செடான் கார்கள் இல்லை.
இதனால், ஐரோப்பிய சந்தையில் சக்கைபோடு போட்டு வரும் இந்த புதிய செடான் கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் கணக்கு போட்டுள்ளது. இதேபோன்று, எஸ்யூவி ரகத்தில் ஹூண்டாய் நிறுவனம் சான்டா பீ பிரிமியம் எஸ்யூவியை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
இந்த எஸ்யூவி தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்து விற்கப்படுவதால் விலை அதிகமாக இருக்கிறது. இதனால், எதிர்பார்த்த விற்பனையை அந்த எஸ்யூவி பெறவில்லை. இதையடுத்து, குறைந்த விலையில் இந்தியாவிலேயே புதிய எஸ்யூவியை தயாரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதேபோன்று, அந்த நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் ஐ10 மற்றும் ஐ20 கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களையும் அறிமுகம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக ஹூண்டாய் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனம் 8 புதிய கார் மாடல்களையும், செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 8 முதல் 10 புதிய கார் மாடல்களையும், ரினால்ட்-நிசான் கூட்டணி 15 புதிய கார் மாடல்களையும் அடுத்த சில ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்போவதாக ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








