டெல்லி ஆட்டோ ஷோ: நாள் ஒன்றுக்கு 30,000 பேருக்கு மட்டும் அனுமதி

ஷாங்காய் மோட்டார் ஷோவுக்கு அடுத்து டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சிதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆட்டோ கண்காட்சியாக கருதப்படுகிறது. மேலும், உலக அளவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது பெரிய ஆட்டோ கண்காட்சியாக திகழ்கிறது.
இந்த நிலையில், உலகின் இரண்டாவது பெரிய ஆட்டோ கண்காட்சி என்ற பெருமையை டெல்லி ஆட்டோ கண்காட்சி இந்த ஆண்டு இழந்து விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டெல்லி பிரகதி மைதானத்தில் வரும் ஜனவரி 5ந் தேதி முதல் 11ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மாண்ட ஆட்டோ கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பல முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஸ்டால்களில் கார்களை பார்வைக்கு வைக்கும் பணிகளையும், பார்வையாளர்களை கவர்வதற்காக அழகுபடுத்தும் பணிகளையும் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், கண்காட்சியை பார்வையிட வரும் பார்வையாளர்கள் அனுமதியை கணிசமாக குறைத்துள்ளது கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள இந்திய வர்த்தக வளர்ச்சி அமைப்பு(ஐடிபிஓ).
இதனால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய ஆட்டோ கண்காட்சி என்ற பெருமையை டெல்லி ஆட்டோ கண்காட்சி இழந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியை 12 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டனர். இதனால், சராசரியாக நாள் ஒன்றுக்கு 1.70 லட்சம் பார்வையாளர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
ஆனால், கூட்ட நெரிசலால் பார்வையாளர்கள் கண்காட்சியை சரிவர பார்வையிட முடியவில்லை என ஏற்பாட்டாளர்கள் மீது புகார் கூறினர். இதைக் கருத்தில்கொண்டே இந்த ஆண்டு பொது பார்வையாளர்கள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் ராஜீவ் கவுல் கூறியதாவது:
இந்த முறை கண்காட்சியில் பல புதிய மாற்றங்களை செய்துள்ளோம். பார்வையாளர்கள் வசதியாக கண்காட்சியை பார்வையிடும் விதமாக நாள் ஒன்றுக்கு 30,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்க முடிவு செய்துள்ளோம். கண்காட்சிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன," என்று கூறினார்.
ஐடிபிஓ அமைப்பின் முடிவு குறித்து இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பிரகதி மைதானம் போன்ற பெரிய இடங்களில் பார்வையாளர்களை கட்டுப்படுத்துவது கடினமான விஷயம்.
இருப்பினும், அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை அதிக பார்வையாளர்கள் பார்வையிட விரும்புகிறோம்," என்று கூறினார்.
இந்த நிலையில், ஏற்பாட்டாளர்களின் இந்த அறிவிப்பு ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








